சென்னை: மா. சுப்பிரமணியன் ஓமந்தூரார் பன்னோக்கு மருத்துவமனையில் ரோபோடிக் அறுவை சிகிச்சைக்கான உபகரணங்களை இன்று (பிப்ரவரி 16) காலை பார்வையிட்டார். இந்நிகழ்வில், சுகாதாரத் துறை முதன்மைச் செயலர் ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
பின்னர் செய்தியாளரிடம் பேசிய மா. சுப்பிரமணியன், "தொற்றா நோய்களுக்கு முக்கியத்துவம் தரும் வகையில் சிறப்பு மருத்துவ வசதிகள் தொடர்ந்து செய்யப்பட்டுவருகின்றன. கடந்த நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்ட திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுவருகின்றன.
புற்றுநோயாளிகளுக்குப் பயன்படும்
அதன்படி 35 கோடி ரூபாய் மதிப்பில் ரோபோடிக் அறுவை சிகிச்சை சாதனம் இங்கு அமைக்கப்பட்டுள்ளது. இதற்காக 50 லட்சம் மதிப்பில் அறுவை சிகிச்சை அரங்கமும் அமைக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் 74 இடங்களில் மட்டுமே இது உள்ளது. மாநில அரசு நடத்தும் மருத்துவமனையில் எந்த இடங்களிலும் இந்த வசதி இல்லை.
புற்றுநோயை முதல் நிலை, இரண்டாம் நிலையிலே கண்டறிந்து சிகிச்சை மேற்கொள்ள புற்றுநோயாளிகள் குறித்த பதிவேடு தயாரிக்கப்பட்டுவருகிறது. புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ரோபோடிக் அறுவை சிகிச்சை இயந்திரம் உதவும். மக்களைத் தேடி மருத்துவம் மூலம் இதுவரை 49.79 லட்சம் பேர் பயனடைந்துள்ளனர்.