தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

மெரினாவில் கோலாகலமாக நடைபெற்ற 71ஆவது குடியரசு தின விழா - Republic day celebration

சென்னை: 71ஆவது குடியரசு தின விழாவையொட்டி சென்னை மெரினா கடற்கரையில் தேசிய கொடியேற்றி வைத்த ஆளுநர் பன்வாரிலால் புரோகித், முப்படை வீரர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார்.

71ஆவது குடியரசு தின விழா
71ஆவது குடியரசு தின விழா

By

Published : Jan 26, 2020, 12:54 PM IST

நாட்டின் 71ஆவது குடியரசு தின விழா இன்று கொண்டாடப்படுகிறது. சென்னை மெரினா கடற்கரை சாலையில் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் மூவர்ண கொடியேற்றினார். இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம், அமைச்சர்கள், சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

அதன் தொடர்ச்சியாக, தமிழ்நாடு காவல்துறை, தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி கடலோர காவல்படை, விமானப்படை, குதிரைப்படை, தேசிய மாணவர் படை, அதிவிரைவுப்படை, மத்திய பாதுகாப்பு படை, துணை இராணுவப்படை, தீயணைப்புத் துறை, வனத்துறை உள்ளிட்ட துறையினரின் அணிவகுப்பு நடைபெற்றது. பின்பு வீரர்களின் அணிவகுப்பு மரியாதையை ஆளுநர் ஏற்றுக்கொண்டார்.

இதைத் தொடர்ந்து வீரதீர செயலுக்கான அண்ணா பதக்கம், கோட்டை அமீர் மத நல்லிணக்க பதக்கம், காந்தியடிகள் காவலர் பதக்கம் மற்றும் அதிக உற்பத்தி திறன் பெறும் விவசாயிக்கான வேளாண்மை துறை சிறப்பு விருதுகள் ஆகியவற்றை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வழங்கினார்.

மெரினாவில் கோலாகலமாக நடைபெற்ற 71ஆவது குடியரசு தின விழா

பின்பு தமிழக காவல் துறையினரின் மோட்டார் வாகன சாகச அணிவகுப்பும், கலாசார பெருமையை விளக்கும் வகையில் பள்ளி மாணவிகள் நடனமும், தேசிய ஒருமைப்பாட்டை விளக்கும் வகையிலான கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றது. தமிழக பாரம்பரியம் மட்டுமின்றி இந்திய பாரம்பரியத்தின் சில நிகழ்ச்சிகள் வட இந்திய நடனமும், காஷ்மீரியன் நடன நிகழ்ச்சிகளும் நடைபெற்றது.

பாதுகாப்பு ஏற்பாடுகள்

குடியரசு தினம் என்பதால் சென்னை முழுவதும் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. சென்னை மெரினா கடற்கரை சாலையில் மட்டும் சுமார் 2 ஆயிரத்திற்கு மேற்பட்ட காவல் துறையினர், துணை இராணுவப் படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மேலும், பறக்கும் கேமராக்களும் கண்காணிப்பில் பயன்படுத்தப்பட்டுள்ளன. அதுமட்டுமின்றி சாலைகள் முழுவதும் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு கட்டுப்பாட்டு அறை மூலம் தீவிரமாகக் கண்காணிக்கப்பட்டுவருகிறது.

இதே போன்று திருவாரூர் மாவட்ட விளையாட்டரங்கில் நடைபெற்ற குடியரசு தின நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் ஆனந்த் தேசிய கொடியை ஏற்றிவைத்து காவல்துறை அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். அதனைத் தொடர்ந்து சுதந்திர போராட்ட தியாகிகளின் குடும்பத்தினருக்கு பொன்னாடை அணிவித்து நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.

திருவாரூர் மாவட்ட விளையாட்டரங்கில் நடைபெற்ற குடியரசு தின நிகழ்ச்சி

தொடர்ந்து சிறப்பாகச் செயல்பட்ட காவல் துறையினருக்கு பதக்கங்கள் மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கி கெளரவித்தார். இந்நிகழ்ச்சியில் அரசு அதிகாரிகள், அரசியல் கட்சியினர், மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

ABOUT THE AUTHOR

...view details