தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

மதத்தின் பெயரால் பொது மக்களுக்கு இடையூறு செய்வதை ஏற்றுக்கொள்ள முடியாது - நீதிமன்றம் காட்டம் - நீதிமன்ற செய்திகள்

மத வழிபாட்டுத் தலங்களின் விதிமீறல் மீது உரிய நடவடிக்கை எடுக்கும் வகையில் உரிய சுற்றறிக்கையை வெளியிடும்படி தமிழ்நாடு தலைமை செயலாளருக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை உயர் நீதிமன்றம்
சென்னை உயர் நீதிமன்றம்

By

Published : Oct 28, 2021, 5:08 PM IST

சென்னை: பிரார்த்தனை கூட்டங்களுக்கு யாரும் இடையூறு ஏற்படுத்தாத வகையில் பாதுகாப்பு வழங்க மாவட்ட நிர்வாகத்திற்கும், காவல்துறைக்கும் உத்தரவிடக்கோரி ஈரோடு மாவட்டம் தொப்பம்பாளையத்தில் உள்ள பென்டகோஸ்டல் மிஷன் சர்ச் அமைப்பு சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டிருந்தது.

இந்த வழக்கு நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம் முன்பு விசாரணைக்கு வந்தபோது, கட்டடத்துக்கான திட்ட அனுமதி கோரி 2014இல் விண்ணப்பித்தும் அனுமதி கிடைக்கவில்லை. கட்டுமான பணிகளை நிறுத்த வேண்டும் என இந்து முன்னணியினர் இடையூறு செய்வதாக மனுதாரர்கள் தரப்பில் குற்றஞ்சாட்டப்பட்டது.

அங்கீகாரம் இல்லாமல் கட்டப்பட்ட கட்டடத்தை பயன்படுத்த அனுமதிக்கப்கூடாது என்றும், வழிபாட்டுத் தலங்களில் அனுமதிக்கப்பட்ட அளவை விட கூடுதலான சத்தத்துடன் தடை செய்யப்பட்ட ஒலிபெருக்கிகளை பயன்படுத்த அனுமதிக்க முடியாது எனவும் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி எஸ்.எம். சுப்ரமணியம் பிறப்பித்த உத்தரவில், பிரார்த்தனை கூடத்திற்கு பாதுகாப்பு வழங்கக்கோரும் பென்டகோஸ்டல் மிஷன் சர்ச்சின் கோரிக்கையை நிராகரித்தார். கட்டட அனுமதி கோரிய மனுவை பரிசீலித்து முடிவெடுக்க வேண்டுமென மாவட்ட நிர்வாகத்திற்கும் உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தார்.

மேலும், அனைவருக்கும் மத வழிபாட்டு உரிமை அரசியல் சாசன சட்டத்தில் வழங்கப்பட்டிருந்தாலும், அது மற்றவர்களின் உரிமையில் தலையிடும் வகையில் இருக்கக் கூடாது என்று குறிப்பிட்டுள்ளார். அனுமதி பெறாத கட்டடத்தில் மத அமைப்புகள் இயங்குவது, அனுமதிக்கப்பட்ட அளவைவிட ஒலி எழுப்பும் வகையில் இயங்குவது போன்றவை சட்ட நடவடிக்கைக்கு உள்பட்டது என்றும் உத்தரவில் தெளிவுபடுத்தியுள்ளார்.

மக்களின் மத உணர்வுகளை காரணம்காட்டி ஆக்கிரமிப்பில் ஈடுபடுவது, அதிக ஒலி எழுப்புவது, பிறருக்கு இடையூறு ஏற்படுத்துவது போன்ற விதிமீறல்களை அரசு தீவிரமாக கருத வேண்டும் என்றும் உத்தரவில் குறிப்பிட்டுள்ளார்.

மத வழிபாட்டு தலங்களுக்கு கட்டட அனுமதி கோரிய விண்ணப்பங்களை பரிசீலிக்கும் போது தமிழ்நாடு மாவட்ட நகராட்சிகள் சட்டம் மற்றும் பஞ்சாயத்துகள் சட்டம் ஆகியவற்றின் விதிகளை பின்பற்றியும், அப்பகுதியில் உள்ள மக்களின் அமைதியான வாழ்க்கைக்கு இடையூறு ஏற்படுத்தாத வகையிலும், எச்சரிக்கையுடன் இருந்து அரசு முடிவெடுக்க வேண்டும் என்று உத்தரவில் குறிப்பிட்டுள்ளார்.

மத வழிபாட்டுத் தலங்களில் ஏற்படுத்தப்படும் இடையூறுகளால், ஒரு மனிதன் நிம்மதியாக உறங்கக்கூட முடியவில்லை என்று குறிப்பிட்ட நீதிபதி சுப்பிரமணியம், நிம்மதியான வாழ்க்கைக்கான பாதுகாப்பை அரசு நிர்வாகம் உறுதி செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.

சட்டங்கள் உருவாக்கப்பட்டது அமல்படுத்துவதற்காகத்தானே தவிர, அதை சட்டப்புத்தகத்தில் மட்டும் வைத்திருப்பதற்காக அல்ல என்பதை அலுவலர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என அரசுக்கு உத்தரவிட்ட நீதிபதி, சட்டத்தை அமல்படுத்துவதில் யாரிடமும் பாரபட்சமும் காட்டக்கூடாது என எச்சரித்துள்ளார்.

பின்னர், இந்த வழக்கில் தாமாக முன்வந்து தலைமைச் செயலாளரை இணைத்த நீதிபதி, மத வழிபாட்டுத் தலங்களின் கட்டட விதி மீறல் மற்றும் ஒலி மாசு ஆகியவற்றின் மீது உரிய நடவடிக்கை எடுக்கும் வகையில் முறையான உத்தரவுகளையும் சுற்றறிக்கையையும் பிறப்பிக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளார்.

இதையும் படிங்க:இந்து மத நம்பிக்கைக்கு எதிராகச் செயல்படும் திமுக - வேலூர் இப்ராஹிம்

ABOUT THE AUTHOR

...view details