சென்னை: இந்து மத கடவுள்களையும், கோயில்களையும் விமர்சித்துப் பேசியதாகக் கிறிஸ்தவ மதபோதகர் மோகன் சி. லாசரஸ் மீது, தமிழ்நாடு முழுவதும் ஒன்பது வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்த வழக்குகளை ரத்து செய்யக்கோரி, மோகன் சி.லாசரஸ், சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனுக்களை நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் விசாரித்தார். அப்போது, ஆவடியில் 2016ஆம் ஆண்டு நடந்த கூட்டத்தில் பங்கேற்றவர்களின் கேள்விகளுக்கு மனுதாரர் பதிலளித்தாரே தவிர, இந்து மதத்தை இழிவுபடுத்த வேண்டும் என்ற உள்நோக்கத்தில் எந்த கருத்தும் கூறவில்லை எனவும், 2016இல் நடந்த நிகழ்வு தொடர்பான காணொலியை, 2018ஆம் ஆண்டு வேண்டுமென்றே வெளியிட்டதாகவும் மோகன் சி. லாசரஸ் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் தெரிவித்தார்.
பின்னர், இதற்கு வருத்தம் தெரிவித்துக் கொள்வதாகவும், எதிர்காலத்தில் இதுபோல் பேசப்போவதில்லை எனவும் உத்தரவாதம் அளித்து, அவர் தரப்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இதையடுத்து, இந்த விவகாரத்தை இத்துடன் முடித்துக் கொள்ளத் தயாராக இருப்பதாகப் புகார்தாரர்கள் தரப்பிலும் தெரிவிக்கப்பட்டது.