தமிழ்நாடு

tamil nadu

By

Published : Jun 9, 2020, 9:17 PM IST

ETV Bharat / city

விழிப்புணர்வை ஏற்படுத்தும் பணிகள் தீவிரம் - அமைச்சர் ஆர்.பி. உதயகுமார்

சென்னையில் கரோனா வைரஸ் குறித்து 100 விழுக்காடு விழிப்புணர்வை ஏற்படுத்தும் பணியை தீவிரப்படுத்தியுள்ளதாக அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் தெரிவித்துள்ளார்.

RB Udhaykumar
RB Udhaykumar

சென்னை திரு.வி.க. நகர் மண்டலத்திற்கு உள்பட்ட அயனாவரம் பகுதியில் வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் ஆய்வு மேற்கொண்டார்.

அதைத்தொடர்ந்து நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பேசிய அமைச்சர் உதயகுமார், "100 விழுக்காடு விழிப்புணர்வை ஏற்படுத்த மாநகராட்சி அலுவலர்கள் நடவடிக்கையை எடுத்துவருகிறார்கள். கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் மக்கள் தேவையின்றி வெளியே வராமல் இருப்பதை உறுதி செய்ய 2,000 தன்னார்வலர்கள் 24 மணி நேரமும் பணியில் உள்ளனர்.

திரு.வி.க.நகர் மண்டலத்தில் உள்ள 7.7 லட்சம் மக்களுக்கு முழுமையாக விழிப்புணர்வு பணிகள் சென்றடைவதைக் கண்காணிக்கிறோம். நோய்த் தொற்று இல்லாத மண்டலமாக திரு.வி.க. நகரை உருவாக்குவோம்.

சென்னையில் தனி மனித இடைவெளி என்பது மிகப்பெரிய சவாலாக உள்ளது. மக்களிடம் விழிப்புணர்வு வேண்டும். அரசின் அறிவுரைகளுக்கு மக்களின் ஒத்துழைப்பு வேண்டும். சென்னையில் 144 தடை உத்தரவு அமலில்தான் உள்ளது. சில தளர்வுகளை வழங்கியுள்ளோம். சென்னையில் கரோனாவை கட்டுப்படுத்த முதலமைச்சர் அதிக கவனம் கொடுக்கிறார்" என்றார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கரோனா சிறப்பு அலுவலர் ராதாகிருஷ்ணன், "சென்னையில் பொதுமக்கள் விதிமுறைகளைப் பின்பற்றாவிட்டால் காவல்துறை மூலம் பேரிடர் மேலாண்மை சட்டத்தின் கீழ் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

கரோனா தடுப்பு பணியில் 2,000 பணியாளர்கள் தவிர ஒன்பது தன்னார்வ நிறுவனங்களும் களத்தில் பணியாற்றிவருகின்றனர். திரு.வி.க. நகரில் சில பகுதிகளில் கடந்த 14 நாள்களாக கரோனா தொற்று கண்டறியப்படவில்லை.

சென்னை மாநகராட்சியில் கரோனா இல்லாத 84% தெருக்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. தொற்று உள்ள 16% தெருக்களில் மேலும் பரவாமல் கட்டுப்படுத்த நடவடிக்கைகள் எடுத்து வருகிறோம்

கண்காணிப்பு குழுவுடன் இணைந்து அமைச்சர்கள் பணியாற்றிவருகின்றனர். கரோனா பாதிப்பு அதிகமுள்ள மண்டலங்களில் தனி கவனம் செலுத்தப்பட்டு வருகிறது. தற்போது எடுக்கப்படும் அனைத்து முடிவுகளும் உலக சுகாதார நிறுவனம், மத்திய, மாநில வல்லுநர் குழுக்களின் அறிவுரைப்படி எடுக்கப்பட்டு வருகிறது.

கரோனாவால் பாதிக்கப்பட்டு அறிகுறிகளை வெளிப்படுத்தாமல் இருப்பவர்களுக்கும் அறிகுறிகளை வெளிப்படுத்துபவர்களுக்கும் ஒரே இடத்தில் சிகிச்சை வழங்கக் கூடாது என வழிகாட்டுதல் உள்ளதாலே, அவர்கள் சிறப்பு முகாம்களில் தங்க வைக்கப்படுகின்றனர்" என்றார்.

இதையும் படிங்க: கரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகள் - அரசாணை வெளியீடு!

ABOUT THE AUTHOR

...view details