தமிழ்நாடு

tamil nadu

By

Published : Jun 27, 2021, 11:00 PM IST

ETV Bharat / city

'பிற்போக்கான தண்டோரா போடும் முறையை தடை செய்க' - விசிக எம்.பி ரவிக்குமார்

தொழில்நுட்பம் வளர்ந்து இந்தக்காலத்திலும் பிற்போக்கான தண்டோரா போடும் முறையை தடை செய்ய வேண்டும் என மக்களவை உறுப்பினர் ரவிக்குமார் தமிழ்நாடு அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளார்.

RAVIKUMAR
RAVIKUMAR

சென்னை: விடுதலை சிறுத்தை கட்சியின் துணை பொதுசெயலாளரும், விழுப்புரம் மக்களவை உறுப்பினருமான ரவிக்குமார் தண்டோரா முறையை ஒழிப்பது குறித்து இன்று (ஜூன் 27) அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அமைச்சரின் பாராட்டு

அதில் 'திருச்சி மாவட்டம் துறையூர் வட்டம், வெங்கடாசலபுரம் கிராமத்தில் உள்ள மானிய நடுநிலை பள்ளி தலைமை ஆசிரியர், சில நாள்களுக்கு முன்னர் தண்டோரா அடித்து அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை ஊக்குவித்தும், மாணவர்கள் கல்வி தொலைக்காட்சி வாயிலாக வீட்டிலிருந்து பாடங்கள் படிப்பதன் அவசியத்தையும் அறிவித்தார்.

அதை அறிந்து பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவரை அலைப்பேசியில் அழைத்துப் பாராட்டியுள்ளார். தொடர்பு சாதனங்கள் பெருகிவிட்ட நிலையில், தண்டோரா போடும் முறையை ஆசிரியர் ஒருவரே பயன்படுத்துவதும் அதை அமைச்சர் ஊக்குவிப்பதும் வேதனையளிக்கிறது.

கருணாநிதியிடம் கோரிக்கை

நான் சட்டப்பேரவை உறுப்பினராக இருந்தபோது மே 25 ஆம் தேதி 2006 அன்று, அன்றைய திமுக ஆட்சியின் முதல் பட்ஜெட்டின்மீது பேசுகிற நேரத்தில் “திருக்கோயில்களில் பரிவட்டம் கட்டுகின்ற முறை அகற்றப்படும் என்று முதல் நாளிலேயே தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் சிறப்பான அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார்கள்.

அது சமூகத்தில் சமூக நீதியை, சமத்துவத்தைக் கொண்டு வருவதற்கு உதவியாக இருக்கிறது. இன்றைக்கும் தமிழ்நாட்டில் அரசின் அறிவிப்புகள் பலவற்றை கிராமப்பகுதிகளில் தண்டோரா போட்டு அறிவிக்கின்ற முறை வழக்கத்தில் இருக்கின்றது. தொடர்பு சாதன வசதிகள் இன்றைக்குப் பல்கிப் பெருகிவிட்ட நிலையில், நாம் உலக நாடுகளுக்கு இணையாக தொலைத்தொடர்பு வசதிகளில் போட்டி போட்டுக் கொண்டிருக்கிறோம்.

குறிப்பிட்ட சமூகத்தை இழிவுப்படுத்துகிறது!

இந்தச் சமயத்தில், தண்டோரா போடுகின்ற முறை ஒரு குறிப்பிட்ட சமூகத்தினரை இன்னமும் கீழான நிலையில் வைத்திருப்பதை இந்த உலகிற்கு சொல்கின்ற முறையாக இருக்கின்றது. எனவே தண்டோரா போட்டு அறிவிப்புச் செய்கின்ற முறையை முற்றாக ஒழித்து உத்தரவிட்டு வரலாற்றில் சிறப்பான ஒரு இடத்தை வகிக்கவேண்டும் என்று உங்களை அன்போடு கேட்டுக் கொள்கின்றேன்” என்று அன்றைய முதலமைச்சர் கருணாநிதி அவர்களுக்குக் கோரிக்கை விடுத்தேன்.

அந்த கோரிக்கை இன்னும் நிறைவேற்றப்படாமல் இருக்கிறது. இப்போதுள்ள அரசு அதை நிறைவேற்றுமா? இதை அரசியல் தலைவர்கள் வலியுறுத்துவார்களா என கேள்வி எழுப்பியுள்ளார்.

இதையும் படிங்க: புதுச்சேரி அமைச்சரவை பதவியேற்பு விழா!

ABOUT THE AUTHOR

...view details