சென்னை: உயர் நீதிமன்றத்தின் மூத்த நீதியரசரான எம்.எம். சுந்தரேஷ், உச்ச நீதிமன்றத்தின் நீதிபதியாக நியமிக்கப்பட்டிருக்கிறார். இது குறித்து பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அதில், “தமிழ்நாட்டைச் சேர்ந்த மேலும் ஒரு நீதியரசர் உச்ச நீதிமன்றத்திற்கு பதவி உயர்வு பெற்று சென்றிருப்பது மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது. அடுத்த சில நாள்களில் உச்ச நீதிமன்ற நீதிபதியாக பொறுப்பேற்கவுள்ள நீதியரசர் எம்.எம்.சுந்தரஷுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
உச்ச நீதிமன்றத்தில் மொத்தமுள்ள 33 நீதிபதிகள் பணியிடங்களில் 10 இடங்கள் காலியாக உள்ளன. அவற்றை நிரப்பும் நோக்கத்துடன் ஒன்பது நீதிபதிகளை மூத்த நீதிபதிகள் குழு பரிந்துரையுடன் ஒன்றிய அரசு நியமித்திருக்கிறது. உச்ச நீதிமன்றத்திற்கு நியமிக்கப்பட்டுள்ள ஒன்பது நீதிபதிகளில் சென்னை உயர் நீதிமன்றத்தில் தலைமை நீதிபதிக்கு அடுத்த நிலையில் பணியாற்றி வந்த நீதியரசர் எம்.எம். சுந்தரேஷும் ஒருவர் ஆவார்.
தமிழ்நாட்டு மக்களின் நீதியரசர்
ஏற்கனவே தமிழ்நாட்டைச் சேர்ந்த நீதியரசர் இராமசுப்பிரமணியன் உச்ச நீதிமன்ற நீதிபதியாக இருக்கும் நிலையில், நீதியரசர் எம்.எம்.சுந்தரேஷும், பதவி உயர்வின் மூலம் உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாட்டின் பிரதிநிதித்துவம் இரண்டாக உயர்ந்துள்ளது. உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாட்டிற்கு போதிய பிரதிநிதித்துவம் இல்லை என்று மனவருத்தம் கொண்டிருந்த தமிழ்நாட்டு மக்கள் அனைவருக்கும் நீதியரசர் சுந்தரேஷின் நியமனம் மிகுந்த மனநிறைவை அளித்திருக்கிறது.
நீதியரசர் எம்.எம். சுந்தரேஷ் உச்ச நீதிமன்றத்தின் நீதிபதியாக நியமிக்கப்படுவதற்கு அனைத்து வகைகளிலும் தகுதியானவர். 23ஆவது வயதில் வழக்கறிஞராக பதிவு செய்து கொண்ட அவர், 29ஆவது வயதில் சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு வழக்கறிஞராக நியமிக்கப்பட்டவர். விசாரணைகளின் போது அவர் முன்வைத்த துல்லியமான வாதங்கள் பல தருணங்களில் நீதிபதிகளின் பாராட்டுகளைப் பெற்றுள்ளன.