சென்னை: உருமாற்றம் அடைந்த கரோனா தொற்றுக்கு ஒமைக்ரான் என்று பெயரிடப்பட்டுள்ளது. இத்தொற்று தற்போது உலகம் முழுவதும் வேகமாகப் பரவிவருகிறது. இந்நிலையில், வெளிநாட்டிலிருந்து சென்னை, திருச்சி விமான நிலையத்திற்கு வந்த பயணிக்கு கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டு, அவர்களின் மரபணு மாற்றம் குறித்து பரிசோதனை நடைபெற்றுவருகிறது.
இதன் தாக்கத்தைத் தவிர்க்க பல்வேறு நடவடிக்கைகள் அரசுத் தரப்பில் எடுக்கப்பட்டுவருகிறது. இது குறித்து பள்ளிக் கல்வித் துறை அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், வேகமாகப் பரவும் ஒமைக்ரான் தொற்று விழிப்புணர்வு, நோய்த் தடுப்பு நடவடிக்கைகள் பள்ளிகளில் தீவிரமாகச் செயல்படுத்த வேண்டும்.
அனைத்து வகை பள்ளிகளிலும் அரசால் வழங்கப்பட்ட வழிகாட்டுதல்களைக் கட்டாயமாகப் பின்பற்ற வேண்டும். ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை சுழற்சி முறையில் வகுப்புகள் நடத்தப்பட வேண்டும், பள்ளிகளில் வகுப்புகள் நேரடியாகவும், ஆன்லைனிலும் நடைபெறலாம்.