சென்னை: இந்தியா முழுவதும் உள்ள 23 மாநிலங்களில் காலியாக உள்ள அஞ்சல் துறையில் கிராம தபால் ஊழியர்களுக்கான பணியிடங்கள் நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. 10ஆம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில், எழுத்துத் தேர்வு ஏதும் இல்லாமல் அஞ்சல் துறையில் பணிநியமனம் செய்யப்பட உள்ளனர்.
இந்திய அஞ்சல் துறை சார்பில், கிராமங்களில் செயல்படும் கிராம தக் சேவக்ஸ் என்ற கிராம தபால் ஊழியர், மற்றும் உதவி தபால் ஊழியர் பணிக்கு அஞ்சல் துறை விண்ணப்பங்களைக் கோரியுள்ளது. நாடுமுழுவதும் 38 ஆயிரத்து 926 பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
இதில் தமிழ்நாட்டில் மட்டும் 4 ஆயிரத்து 310 பேரும், மத்தியப் பிரதேசத்தில் 4074 பேரும், தேர்வு செய்யப்பட உள்ளனர்.இந்த பணியிடங்களுக்கு ஆன்லைனில் ஜூன் 5ஆம் தேதி வரையில் விண்ணப்பிக்கலாம். கிராம அஞ்சலக ஊழியர் பணிக்கு விண்ணப்பிப்போர் அங்கீகரிக்கப்பட்ட கல்வி வாரியத்தின் கீழ் அல்லது அரசுப்பள்ளியில் 10-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருத்தல் அவசியம். 18 வயது முதல் 40 வயதுள்ளவர்கள் விண்ணப்பிப்பவர்கள் ஆகலாம்.
இதில் பட்டியலினத்தவர்களுக்கும், பழங்குடியினருக்கும் 5 ஆண்டுகள் தளர்வும், மாற்றுத்திறனாளிகளுக்கு 10 ஆண்டுகள் தளர்வும் அளிக்கப்பட்டுள்ளது. கிராம அஞ்சலக ஊழியருக்கு அடிப்படை ஊதியமாக ரூ.12 ஆயிரம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. உதவி அஞ்சலக ஊழியருக்கு ரூ.10ஆயிரம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.