தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

வேதாந்தா, ஓ.என்.ஜி.சி. நிறுவனங்களுக்கு பூவுலகின் நண்பர்கள் அமைப்பு கண்டனம்!

சென்னை: ஹைட்ரோகார்பன் கிணறுகள் அமைக்க வேதாந்தா, ஓ.என்.ஜி.சி. நிறுவனங்கள் மத்திய அரசிடம் அனுமதி கோரி மனு அளித்துள்ளதற்கு பூவுலகின் நண்பர்கள் அமைப்பு சார்பாக கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

By

Published : Apr 11, 2019, 2:56 PM IST

ஹைட்ரோகார்பன்

இது குறித்து பூவுலகின் நண்பர்கள் அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், 'காவிரிப்படுகையில் நிலப்பகுதி மற்றும் ஆழமற்ற கடல்பகுதி சேர்த்து ஓ.என்.ஜி.சி. நிறுவனத்திற்கும், வேதாந்தா நிறுவனத்திற்கும் தலா இரண்டு மண்டலங்களில் ஹைட்ரோகார்பன் எடுக்கும் உரிமத்தை மத்திய பெட்ரோலியத்துறை கடந்த ஆண்டு வழங்கியிருந்தது.

நெடுவாசல் உள்ளிட்ட காவிரி டெல்டா பகுதிகளில் ஹைட்ரோகார்பன் எடுப்பதற்கு விவசாயிகள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியதையடுத்து, தற்போது மீண்டும் தமிழ்நாட்டில் ஹைட்ரோகார்பன் திட்டங்களை தொடங்கியுள்ளது. இம்முறை வேதாந்தா நிறுவனத்திற்கு ஹைட்ரோகார்பன் எடுப்பதற்கான உரிமத்தை வழங்கியுள்ளது.

அதனடிப்படையில் காவிரி டெல்டா மாவட்டங்களில் 341 ஹைட்ரோகார்பன் கிணறுகள் அமைக்க வேதாந்தா மற்றும் ஒ.என்.ஜி.சி. நிறுவனங்கள் சுற்றுச்சூழல் அறிக்கை தயார் செய்வதற்கான ஆய்வு எல்லைகளை வழங்குமாறு மத்திய சுற்றுச்சூழல் துறையின் நிபுணர் மதிப்பீட்டுக் குழுவிடம் விண்ணப்பித்துள்ளது. வேதாந்த நிறுவனம் 274 கிணறுகளையும், ஓ.என்.ஜி.சி. நிறுவனம் 67 கிணறுகளையும் அமைக்கிறது. இதில் ஒ.என்.ஜி.சி. அமைக்கவுள்ள 27 கிணறுகளுக்கு முதற்கட்டமாக சுற்றுச்சூழல் ஆய்வு செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

நாகை, காரைக்கால், விழுப்புரம், கடலூர், புதுச்சேரி, கடலூர், திருவாரூர் ஆகிய இடங்களில் நிலப்பகுதி மற்றும் ஆழமற்ற கடற்பகுதியில் இந்த கிணறுகள் அமைக்கப்படவுள்ளன. சீர்காழி, தரங்கம்பாடி, கீழ்வேளூர், வேதாரண்யம், கோட்டுச்சேரி, திருமலைராயன், திண்டிவனம், வானூர், காரைக்கால், புவனகிரி, பெரியகுடி ஆகிய இடங்களில் இந்த கிணறுகள் அமைவதற்கான திட்டங்கள் தயாரிக்கப்பட்டு வருகின்றன.

இந்தத் திட்டத்தை செயல்படுத்துவதற்கு ஏதுவாக கடந்த ஆண்டே மத்திய அரசு விதியில் மாற்றம் கொண்டு வரும் கோரிக்கையினை முன்வைத்திருந்தது.

இந்நிலையில் தமிழ்நாட்டின் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கே.சி.கருப்பணன் இந்தியச் சுற்றுச்சூழல் துறையின் அமைச்சர் ஹர்ஷவர்தனை சந்தித்து ஒரு கோரிக்கை மனுவை அளித்தார். அதில் தமிழ்நாட்டில் ஹைட்ரோகார்பன் போன்ற திட்டங்களை நடைமுறைப்படுத்த மக்களின் கருத்துக் கேட்பு இல்லாமலே சுற்றுச்சூழல் அனுமதியை வழங்கும்படி அதில் கோரப்பட்டிருந்தது.

தமிழ்நாட்டின் பிரதான கட்சிகள் அனைத்தும் காவிரி டெல்டா பகுதியை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க வேண்டும் என்பதை தங்களது தேர்தல் வாக்குறுதியாக அளித்துள்ள நிலையில் மத்திய அரசின் இந்த முயற்சி கடும் கண்டனம்'என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ABOUT THE AUTHOR

...view details