குடியுரிமை சட்டத் திருத்த மசோதா - 2019 இன்று நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்பட்டது. இந்த சட்டத் திருத்தத்தின்படி பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்காளதேசம் ஆகிய நாடுகளில் இருந்து இந்தியாவில் ஐந்து வருடங்களுக்கும் மேலாக தங்கி உள்ள இஸ்லாமியர்கள் அல்லாதவர்களுக்கு இந்திய குடியுரிமை அளிக்கப்படும். இந்த சட்ட திருத்த மசோதாவில் இலங்கையிலிருந்து அகதிகளாக வரும் இலங்கை தமிழர்கள் குறித்து எதுவும் கூறப்படவில்லை. இதுபற்றி நம்மிடையே விரிவாகப் பேசுகிறார் அரசியல் விமர்சகர் மார்க்ஸ்.
ஈ டிவி பாரத் தமிழ்நாடு ஊடகத்திற்கு மார்க்ஸ் அளித்த சிறப்புப் பேட்டியில், ' 2014ஆம் ஆண்டு தேர்தல் அறிக்கையில் பாஜக வெளிநாடுகளில் இருந்து வரக்கூடிய இந்துக்கள் அனைவருக்கும் உரிமை அளிக்கப்படும் என அறிவித்தனர். இது இஸ்ரேல் நாட்டின் கோட்பாடாகும். இஸ்ரேலில் வெளிநாட்டிலிருந்து வரும் யூதர்கள் யாவருக்கும் குடியுரிமை அளிக்கப்படும் என 'அலியா' கோட்பாடுபடி அறிவித்திருந்தார்கள். உலகிலேயே மிக மோசமான மனித உரிமை மீறல்கள் நடக்கும் நாடு இஸ்ரேல். அங்குள்ள முஸ்லிம்கள் மீது கடுமையானத் தாக்குதல்கள் நடந்து வருகின்றன. இதற்கு முந்தைய ஆட்சிக் காலங்களில் இஸ்ரேலுடன் இந்தியா உறவு வைத்துக்கொண்டதில்லை.
முதன்முதலாக நரேந்திர மோடி தான் இஸ்ரேல் சென்று ஏற்பட்ட உறவின் அடிப்படையில், அந்த நாட்டு கொள்கைக் கோட்பாடுகள் இந்தியாவிலும் நடைமுறைப்படுத்தப்படுகிறது. அதன்படிதான் இந்த குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவும் இங்கே கொண்டு வரப்பட்டுள்ளது.
அதன்படி ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், வங்கதேசம் ஆகிய நாடுகளிலிருந்து வரும் இந்துக்களுக்கு குடியுரிமை அளிக்க முடிவு செய்துள்ளனர். இதை அவர்கள் திட்டமிட்டு இந்தியா ஒரு இந்து நாடு என்பதை காட்டிக்கொள்ள முயற்சி செய்கிறார்கள்.
வடகிழக்குப் பகுதிகளில் பக்கத்து நாடுகள், மாநிலங்களிலிருந்து யாரும் ஊடுருவ முடியாது. இதற்காக அங்கு மின்சார வேலிகள் போடப்பட்டு ராணுவத்தினர் பாதுகாப்பில் ஈடுபட்டுள்ளனர். அப்படித்தான் மக்கள் ஊடுருவலை தவிர்க்க வேண்டுமே தவிர, மத அடிப்படையில் பிரித்து இந்துக்களுக்கு மட்டும் சிறப்பு அந்தஸ்து என்று கூற அரசியலமைப்புச் சட்டத்தில் இடமில்லை. அது அரசியலமைப்புச் சட்டத்தின் பிரிவு 14இல் யாரையும், யாருக்கும் அடிப்படையில் பிரித்து சிறப்புச் சலுகைகள், கொடுமைகள் இழைக்கக் கூடாது என்று தெளிவாகக் கூறப்பட்டுள்ளது. ஆனால், இவர்கள் அந்தச் சட்டத்தை ஏற்காதவர்கள். வாஜ்பாய் காலத்தில் அரசியலமைப்புச் சட்டத்தில் திருத்தங்களை செய்வதற்காக ஓய்வு பெற்ற நீதிபதி வெங்கடாச்சாரியார் தலைமையில் குழு அமைத்தவர்கள். உலகிலேயே தலைசிறந்த அரசியல் சட்டங்களில் ஒன்றாக இருக்கும் நமது அரசியல் சட்டத்தை குப்பையில், தூக்கி எறிந்து சட்டத்தை மறக்கச் செய்யும் கொள்கை உடையவர்கள் இவர்கள்.