சென்னை:மாதவரத்தில் போதைப்பொருள் கைமாறுவதாக கீழ்ப்பாக்கம் துணை ஆணையரின் தனிப்படை காவல் துறைக்கு தகவல் கிடைத்தது. அத்தகவலின்பேரில், கடந்த 28ஆம் தேதி தனிப்படை காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து விசாரணை நடத்திய போது, சந்தேகத்திற்கிடமாக கையில் பையுடன் நின்றிருந்த இருவரிடம் விசாரித்தனர்.
அப்போது, போதைப்பொருள்போல் இருந்ததால் காவல் நிலையம் அழைத்துச்சென்று விசாரணை நடத்தி உள்ளனர். விசாரணையில் ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த தமீம் அன்சாரி(27) மற்றும் மதுரையைச் சேர்ந்த முகமது சபி(29) என்பது தெரியவந்தது.
மேலும் ஹெராயின் என்னும் போதைப்பொருளை ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த முத்துராஜா(40) மற்றும் அருண்குமார்(31) ஆகியோரிடம் இருந்து பெற்றதாக வாக்குமூலம் அளித்தனர்.
வாக்குமூலத்தின் அடிப்படையில் ராமநாதபுரம் மாவட்டத்தில் பதுங்கியிருந்த முத்துராஜா மற்றும் அருண்குமார் ஆகியோரை தனிப்படை காவல் துறையினர் கைது செய்தனர். பின்னர் கைது செய்யப்பட்டவர்களிடம் நடத்திய விசாரணையில் பல சுவாரஸ்யத் தகவல்கள் வெளியாகின.
ஓட்டுநராக உள்ள முத்துராஜா தேவகோட்டையில் தனது நண்பரான மணவாளன் என்பவருடன் சேர்ந்து ஒரு கிலோ யூரியாவை வாங்கி, அதில் சில வேதிப்பொருட்களைச் சேர்த்து அரைத்து ஹெராயின் என்னும் போதைப்பொருள் போல் தயாரித்துள்ளனர்.
இதனையடுத்து தயாரிக்கப்பட்ட 1 கிலோ போதைப்பொருளை முத்துராஜா தனக்குத் தெரிந்த நண்பரான அருண் குமார் என்பவரிடம் கொடுத்து விற்று கொடுக்குமாறு தெரிவித்துள்ளார். அருண்குமார் அவருக்குத் தெரிந்த நண்பரான தமீம் அன்சாரி மற்றும் முகமது சபி ஆகியோரிடம் தெரிவித்துள்ளார்.
கல்லூரி மாணவர்களுக்கு விற்பனை