தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

PMK Ramadoss: உழவர்களுக்கு ரூ.6,000 நிதி: தகுதியுள்ள அனைவருக்கும் பெற்றுத்தர வேண்டும்!

சென்னை: தகுதியுள்ள அனைத்து உழவர்களுக்கும், அவர்களுக்கு கிடைக்கபெற உள்ள நிதியை பெற்றுத்தர வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.

By

Published : Oct 6, 2019, 7:09 PM IST

ramdoss

பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், “சிறு, குறு விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ.6000 மானியம் வழங்கும் திட்டத்தின்படி, மூன்றாவது தவணை நிதி வழங்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. மத்திய அரசு நிர்ணயித்த தகுதிகளின் அடிப்படையில் முதல் இரு தவணைகள் நிதி பெற்ற கோடிக்கணக்கான விவசாயிகளுக்கு மூன்றாவது தவணை நிதி மறுக்கப்பட்டிருக்கிறது. விவசாயிகளைப் பாதிக்கும் இந்த நடவடிக்கை நியாயமற்றதாகும்.

உழவர்களின் முடிவில்லாத துயரங்களுக்கு முடிவு கட்டுவதற்கான நடவடிக்கைகளின் ஒரு கட்டமாக, ஏக்கருக்கு ரூ.10,000 வீதம் மானியம் வழங்க வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சி பல ஆண்டுகளாக வலியுறுத்திவந்தது. அதையேற்று நாடு முழுவதும் உள்ள சிறு, குறு விவசாயிகளுக்கு நான்கு மாதங்களுக்கு தலா ரூ.2,000 வீதம், ஆண்டுக்கு ரூ.6,000 வழங்கும் திட்டத்தைப் பிப்ரவரி மாதம் தாக்கல் செய்யப்பட்ட இடைக்கால நிதிநிலை அறிக்கையில் மத்திய அரசு அறிவித்தது. அதன்படி, இரண்டு தவணை நிதியுதவி வழங்கப்பட்டுவிட்ட நிலையில், ஆகஸ்ட் முதல் நவம்பர் வரையிலான கால கட்டத்திற்கான நிதியுதவி இப்போது வழங்கப்பட்டு வருகிறது. இந்த பருவத்தில் முதல் இரு மாதங்கள் முடிவடைந்துவிட்ட நிலையில், தகுதியுடையவர்களில் 10 விழுக்காட்டுக்கும் குறைவானவர்களுக்கே நிதி வழங்கப்பட்டுள்ளது.

உண்மையில் மத்திய அரசின் நிதியுதவி தகுதியுடைய உழவர்களில் பாதி பேருக்குக் கூட வழங்கப்படவில்லை. தமிழகத்தில் 2 ஹெக்டேருக்கும் குறைவான நிலம் வைத்துள்ள விவசாயிகளின் எண்ணிக்கை 68 லட்சம் ஆகும். ஆனால், அவர்களில் 32.43 லட்சம் விவசாயிகள் மட்டும்தான் நிதியுதவி கோரி விண்ணப்பித்தனர். மீதமுள்ள 36 லட்சம் விவசாயிகள் விண்ணப்பிக்காததற்குக் காரணமே, அதற்குத் தேவையான ஆவணங்களைப் பெற முடியாததுதான். அவர்களுக்கும் நிதியுதவியைப் பெற்றுத் தருவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்குப் பதிலாக, ஏற்கனவே உதவி பெறும் உழவர்களின் எண்ணிக்கையை ஆவணங்களின் பிழையைக் காரணம்காட்டி குறைப்பதை எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாது.

உழவர்களுக்கு முதல் தவணை நிதியுதவி வழங்க மத்திய அரசு ரூ.20,000 கோடி ஒதுக்கீடு செய்தது. அதைக் கொண்டு 10 கோடி பேருக்கு நிதியுதவி வழங்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால், 6.71 கோடி பேருக்கு மட்டுமே நிதி வழங்கப்பட்டது. நடப்பாண்டில் ரூ.75,000 கோடி ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், அதைக் கொண்டு 12.50 கோடி பேருக்கு நிதி வழங்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால், அதில் மூன்றில் ஒரு பங்கு விவசாயிகளுக்குக் கூட இன்னமும் உதவி வழங்கப்படவில்லை. நடப்பாண்டின் முதல் இரு பருவங்களில் ரூ.50,000 கோடி வழங்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால், இதுவரை ரூ.13,400 கோடி மட்டுமே வழங்கப்பட்டுள்ளது. இத்திட்டம் முழுமையாகச் செயல்படுத்தப்படவில்லை என்பதற்கு இதுவே சாட்சி.

எனவே, இத்திட்டத்தின்படி விண்ணப்பித்த அனைத்து உழவருக்கும் நிதியுதவி வழங்கப்பட வேண்டும். விவசாயிகளின் விண்ணப்பங்களில் உள்ள குறைகளைச் சரிசெய்ய சிறப்பு முகாம்கள் நடத்தப்பட வேண்டும். இத்திட்டத்தின்படி மானியம் பெறத் தகுதியுடைய, ஆனால் இதுவரை விண்ணப்பிக்காத உழவர்களும் சரியான ஆவணங்களுடன் விண்ணப்பித்து, நிதியுதவி பெற்றுப் பயனடையவேண்டும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ABOUT THE AUTHOR

...view details