இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், " கோயம்பேடு சந்தைக்கு வந்த அதே ஊர்களில் இருந்து தான் திருமழிசைக்கும் காய்கறிகள் வருகின்றன. ஒவ்வொரு நாளும் திருமழிசை சந்தையில் பல்லாயிரக்கணக்கானோர் கூடுகின்றனர். தனி மனித இடைவெளியை கடைபிடிக்க வேண்டும்; முகக்கவசம், கையுறைகளை அணிய வேண்டும் என்று அரசு தொடர்ந்து அறிவுறுத்தி வந்தாலும், திருமழிசை சந்தையில் ஆரம்பத்தில் சில நாட்களைத் தவிர, அடுத்தடுத்த நாட்களில் எதுவும் கடைபிடிக்கப்படவில்லை.
மாநிலம் விட்டு மாநிலம் வரும் சரக்குந்துகள் மற்றும் ஓட்டுநர்கள், மாவட்டம் விட்டு மாவட்டம் வரும் வணிகர்கள், பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த தொழிலாளர்கள் என பல்வேறு தரப்பினரும் சங்கமமாகும் திருமழிசை சந்தையில் ஏதேனும் ஒருவருக்கு கரோனா கண்டுபிடிக்கப்பட்டாலும், அது மளமளவென மற்றவர்களுக்குத் தொற்றி, அடுத்த சில நாட்களில் புதிய நோய்த்தொற்று மையத்தை உருவாக்கி விடக்கூடும்.