தமிழ்நாடு

tamil nadu

By

Published : Feb 25, 2022, 9:09 PM IST

ETV Bharat / city

தனக்கு எதிரான வழக்கை நிராகரிக்கக் கோரிய ஓபிஎஸ்ஸின் மனு மீதான தீர்ப்பு ஒத்திவைப்பு!

தனக்கு எதிரான தேர்தல் வழக்கை நிராகரிக்கக் கோரி, அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம் தரப்பில் தாக்கல்செய்த மனு மீதான தீர்ப்பை, தேதி குறிப்பிடாமல் சென்னை உயர் நீதிமன்றம் தள்ளிவைத்துள்ளது.

பன்னீர்செல்வம் தாக்கல் செய்த மனு
பன்னீர்செல்வம் தாக்கல் செய்த மனு

சென்னை: நடந்து முடிந்த 2021 சட்டப்பேரவைத் தேர்தலில் தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்ட முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம், தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட திமுக வேட்பாளர் தங்க தமிழ்செல்வனைவிட 11 ஆயிரத்து 21 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றிபெற்றார்.

பன்னீர்செல்வம் வெற்றிபெற்றதை எதிர்த்து தொகுதி வாக்காளர் மிலானி என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் தேர்தல் வழக்குத் தாக்கல்செய்துள்ளார். அந்த மனுவில், பன்னீர்செல்வம் தாக்கல்செய்த வேட்புமனுவில் குறைபாடுகள் உள்ளதாகவும், கடன் மதிப்பை குறைத்து காட்டியுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

இந்த வழக்கை நிராகரிக்கக் கோரி பன்னீர்செல்வம் தரப்பில் தாக்கல்செய்யப்பட்ட மனு, நீதிபதி பாரதிதாசன் முன் இன்று (பிப்ரவரி 25) விசாரணைக்கு வந்தது. அப்போது, பன்னீர்செல்வம் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர், வேட்புமனுவில் சொத்து, கடன் விவரங்களைத் தெரிவிக்கவில்லை எனக் கூறுவது தவறு எனவும், அனைத்து விவரங்களும் தெரிவிக்கப்பட்டதாகவும், எந்தத் தகவலையும் மறைக்கவில்லை என்றும் வாதிட்டார்.

ஏதேனும் விவரங்களை மறைத்திருந்தால்தான் வேட்புமனுவை நிராகரிக்க முடியும் எனத் தெரிவித்த அவர், வேட்புமனுவில் குறிப்பிட்ட சொத்துகளை வாங்கிய விலையையும், தற்போதைய சந்தை மதிப்பையும் குறிப்பிட்டுள்ளதாகவும் வாதிட்டார். நீதிமன்ற நேரத்தை வீணடிக்கும் வகையில் தாக்கல்செய்யப்பட்ட இந்த வழக்கைத் தள்ளுபடி செய்ய வேண்டும் எனவும் தெரிவித்தார்.

மிலானி தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர், தகவல்களை மறைத்ததற்கான ஆதாரங்கள் உள்ளதால், அவரைப் போட்டியிடவே அனுமதித்திருக்கக் கூடாது எனவும், மனைவி பெயரில் உள்ள பங்களாவைப் பற்றிய தகவலை வேட்புமனுவில் தெரிவிக்கவில்லை எனவும் வாதிட்டார்.

தமிழ்நாடு முதலமைச்சராக இருந்து பல சட்டங்களைக் கொண்டுவந்த பன்னீர்செல்வம், வேட்புமனுவில் அனைத்துத் தகவல்களையும் தெரிவிக்க வேண்டும் எனவும் வாதிட்டார். இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, தேர்தல் வழக்கை நிராகரிக்கக் கோரி பன்னீர்செல்வம் தாக்கல்செய்த மனு மீதான தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்தார்.

இதையும் படிங்க:தேர்தல் தோல்வியால் மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் தற்கொலை

ABOUT THE AUTHOR

...view details