தமிழ்நாடு

tamil nadu

By

Published : Feb 15, 2022, 1:00 PM IST

ETV Bharat / city

பப்ஜி மதன் தாக்கல் செய்த மனு தள்ளுபடி!

குண்டர் சட்டத்தை ரத்து செய்யக்கோரி பப்ஜி மதன் தாக்கல் செய்த வழக்கை முன்கூட்டியே விசாரிக்கக் கோரிய மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

pubg madhan request denied by madras high court
சென்னை உயர் நீதிமன்றம்

சென்னை: மதன் மற்றும் டாக்சிக் மதன் 18 பிளஸ் என்ற யூ டியூப் சேனல்கள் மூலமாக பப்ஜி உள்ளிட்ட ஆன்லைன் விளையாட்டுகளை ஆபாசமாக பேசிக்கொண்டே விளையாடியதாக அளிக்கப்பட்ட புகார்களின் அடிப்படையில், மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் காவல் துறையினர், பெண்களை ஆபாசமாக சித்தரித்து பேசுதல், ஆபாசமாக பேசுதல், தகவல் தொழில் நுட்பத்தை தவறாக பயன்படுத்துதல், தடை செய்யப்பட்ட செயலியை பயன்படுத்துதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர்.

இந்த வழக்கில் ஜூன் 18ஆம் தேதி தர்மபுரியில் கைது செய்யப்பட்ட பப்ஜி மதன், புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். ஏராளமான புகார்கள் வந்ததால், குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க சென்னை மாநகர காவல் ஆணையர், ஜூலை 5ஆம் தேதி உத்தரவு பிறப்பித்தார்.

இந்த உத்தரவை ரத்து செய்யக் கோரி, பப்ஜி மதன் என்கிற மதன் குமார் தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம் தமிழ்நாடு அரசு, சென்னை காவல் ஆணையரும் பதிலளிக்க உத்தரவிட்டது.

இந்த வழக்கை முன்கூட்டியே விசாரிக்கக் கோரி மதனின் மனைவி கிருத்திகா மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு நீதிபதிகள் பி.என்.பிரகாஷ், நீதிபதி ஏ.ஏ.நக்கீரன் அமர்வில் விசாரணைக்கு வந்தது.

அப்போது மதன் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், ஏழு மாதத்திற்கு மேல் சிறையில் இருப்பதால் குண்டர் சட்டத்தை ரத்து செய்யக் கோரிய மனுவை விரைவாக விசாரணைக்கு எடுத்துக்கொள்ள வேண்டும் என வாதிட்டார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த அரசு தரப்பு வழக்கறிஞர், உடல் நிலையை காரணம் காட்டி முன்கூட்டியே விசாரணை கோருவதாகவும், ஆனால் மதனின் உடல் நிலை நல்ல நிலையில் உள்ளதாகவும், ஃபிசியோதரப்பி சிகிச்சை மட்டுமே தேவைப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டது.

அப்போது நீதிபதிகள், மதனின் பேச்சு நச்சுத்தன்மையாக உள்ளதாகவும், அவரை ஏன் வெளியில் விட வேண்டுமென கேள்வி எழுப்பினர். மேலும் குண்டர் சட்டத்தை ரத்து செய்யக்கோரி மனு வரும் 22ஆம் தேதி விசாரணைக்கு வரவுள்ள நிலையில் அதற்கு முன்பாக விசாரணைக்கு எடுத்துக்கொள்ள முடியாது என கூறி கிருத்திகாவின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

இதையும் படிங்க: பப்ஜி மதன் மனைவியிடம் லஞ்சம் கேட்ட அலுவலர் பணியிடை நீக்கம்!

ABOUT THE AUTHOR

...view details