சென்னை:தூத்துக்குடியைச் சேர்ந்த வழக்கறிஞர் ராம்குமார் ஆதித்தன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றைத் தொடர்ந்துள்ளார். அதில், "கடந்த நவம்பர் 21ஆம் தேதி தமிழ்நாடு கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை பிறப்பித்த உத்தரவில் கூட்டுறவு வங்கிகளில் ஐந்து சவரன் வரை வைக்கப்பட்டுள்ள நகைக் கடன்களை ரத்துசெய்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இந்த உத்தரவு பொது நலனுக்கு முரணாக அறிவிக்கப்படுள்ளது.
பல்வேறு இயற்கைச் சீற்றங்களால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம், பயிர்களுக்கான இழப்பீடு ஆகியவற்றை வழங்கி 2021-22ஆம் ஆண்டில் நிதிப் பற்றாக்குறையுடன் உள்ள அரசு, நகைக்கடன் ரத்து செய்யும்போது பல்வேறு விதிமீறல்களைச் செய்துள்ளன.
கூட்டுக்குடும்ப நடைமுறையை சிதைக்கிறதா?
நகைக் கடனுக்கான வட்டி, அசலில் கொஞ்சம் கொஞ்சமாக கட்டிவருபவர்களுக்கு கடன் தள்ளுபடி சலுகை வழங்காமல், எந்தத் தொகையும் செலுத்தாதவர்களுக்குச் சலுகை வழங்கப்பட்டுள்ளது. கூட்டுக் குடும்ப நடைமுறையைச் சிதைக்கும் வகையில் தகுதிகள் நிர்ணயிக்கப்பட்டுள்ளன.
நகைக்கடன் தள்ளுபடி மற்றும் சமூக நலத் திட்டங்களுக்கான பயன்களை விவசாயிகளும், சுய உதவிக் குழுக்களும் பெறுவதற்கு வருமானம், பொருளாதார எல்லை ஆகியவை நிர்ணயிக்கப்பட்டுள்ளபோது, தற்போதைய நகைக்கடன் தள்ளுபடிக்கு அதுபோன்ற விதிகள் ஏதும் பின்பற்றப்படவில்லை. எனவே தமிழ்நாடு அரசின் நகைக்கடை தள்ளுபடி உத்தரவை ரத்துசெய்ய வேண்டும்" எனக் குறிப்பிட்டு கோரிக்கைவைத்துள்ளார்.
இந்த வழக்கு பொறுப்புத் தலைமை நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரி, நீதிபதி ஆதிகேசவலு அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, வழக்கைத் திரும்பப் பெறுவதாக மனுதாரர் தரப்பில் கடிதம் அனுப்பபட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது. அதனை ஏற்ற நீதிபதிகள், நகைக்கடன் தள்ளுபடிக்கு எதிராகத் தொடரப்பட்ட மனுவினைத் திரும்பப் பெற அனுமதித்து, அதைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.
இதையும் படிங்க: டாஸ்மாக் பார்களையும் 6 மாதங்களில் மூட வேண்டும் - உயர் நீதிமன்றம் உத்தரவு