தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

தனி நபர்களுக்கு காவல்துறை பாதுகாப்பு - நீதிபதிகள் கேள்வி! - சென்னை உயர் நீதிமன்றம்

சென்னை: தமிழ்நாட்டில் எத்தனை தனி நபர்களுக்கு காவல்துறை பாதுகாப்பு வழங்கப்படுகிறது? எதற்காக வழங்கப்படுகிறது? என காவல்துறை இயக்குநர் (டிஜிபி) பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

highcourt
highcourt

By

Published : Mar 9, 2020, 4:31 PM IST

செங்கல்பட்டு மாவட்டம், கடப்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்த குப்புசாமி என்பவர் மீன் வலை தயாரிக்கும் தொழிற்சாலை நடத்தி வருகிறார். இந்நிலையில், கடந்த ஜனவரி 21 ஆம் தேதி அவரது மகன் சதீஷ்குமார், தொழிற்சாலை உள்ளிட்ட 5 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துகளை தனது பெயருக்கு மாற்றக் கேட்டு, உறவினர்களுடன் வந்து குப்புசாமியை தாக்கியுள்ளார்.

இதுகுறித்து குப்புசாமி சூனாம்பேடு காவல் நிலையத்தில் புகார் அளித்த நிலையில், காவல்துறையினர் அவரை அழைத்து சொத்துகளை மகனின் பெயருக்கு எழுதிக் கொடுக்கும்படி கட்டப்பஞ்சாயத்து செய்ததாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில், சென்னையில் வழக்குரைஞரின் ஆலோசனையைப் பெற வந்த குப்புசாமி, ஊர் திரும்பவில்லை எனக் கூறி அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உத்தரவிட வேண்டும் என, அவரது சகோதரர் பக்தவச்சலம் சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனுவைத் தாக்கல் செய்தார்.

இந்த மனு நீதிபதிகள் கிருபாகரன், ஹேமலதா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தபோது, நேரில் ஆஜரான குப்புசாமி தனது புகார் மீது வழக்குப்பதிவு செய்யத் தவறிய காவல்துறையினருக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், தனக்கு காவல்துறை பாதுகாப்பு வழங்க உத்தரவிட வேண்டும் எனவும் மனுத்தாக்கல் செய்தார்.

இந்த மனு தொடர்பாக காவல்துறை இயக்குநர்(டிஜிபி), மாநகரக் காவல் ஆணையரை எதிர்மனுதாரராக சேர்த்த நீதிபதிகள், பல்வேறு கேள்விகளை எழுப்பினர்.

தமிழகத்தில் எத்தனை தனி நபர்களுக்கு காவல்துறை பாதுகாப்பு வழங்கப்படுகிறது?

  • எதற்காக பாதுகாப்பு வழங்கப்படுகிறது?
  • காவல்துறை பாதுகாப்புத் தேவையா, இல்லையா என்பதை எத்தனை நாட்களுக்கு ஒரு முறை ஆய்வு செய்யப்படுகிறது?
  • கட்டப் பஞ்சாயத்து பேர்வழிகளுக்கு எதற்காக காவல்துறை பாதுகாப்பு வழங்கப்படுகிறது?
  • சமூதாயத்தில் தன்னை உயர்ந்தவர்களாக காட்டிக்கொள்ள தனிநபருக்கு காவல்துறை பாதுகாப்பு வழங்கப்படுகிறதா?

என்பன உள்ளிட்ட பல்வேறு கேள்விகளுக்கு மார்ச் 12 ஆம் தேதிக்குள் பதிலளிக்க உத்தரவிட்டனர். மேலும், அன்றைய நாள் செங்கல்பட்டு மாவட்டக் காவல் கண்காணிப்பாளர், ஆய்வாளர் மற்றும் உதவி ஆய்வாளர் ஆகியோர் நேரில் ஆஜராகவும் உத்தரவிட்ட நீதிபதிகள் விசாரணை ஒத்திவைத்தனர்.

இதையும் படிங்க: சென்னையில் நாட்டு வெடிகுண்டு வீசிய வழக்கு - 8 பேர் சேலம் மத்திய சிறைக்கு மாற்றம்!

ABOUT THE AUTHOR

...view details