செங்கல்பட்டு மாவட்டம், கடப்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்த குப்புசாமி என்பவர் மீன் வலை தயாரிக்கும் தொழிற்சாலை நடத்தி வருகிறார். இந்நிலையில், கடந்த ஜனவரி 21 ஆம் தேதி அவரது மகன் சதீஷ்குமார், தொழிற்சாலை உள்ளிட்ட 5 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துகளை தனது பெயருக்கு மாற்றக் கேட்டு, உறவினர்களுடன் வந்து குப்புசாமியை தாக்கியுள்ளார்.
இதுகுறித்து குப்புசாமி சூனாம்பேடு காவல் நிலையத்தில் புகார் அளித்த நிலையில், காவல்துறையினர் அவரை அழைத்து சொத்துகளை மகனின் பெயருக்கு எழுதிக் கொடுக்கும்படி கட்டப்பஞ்சாயத்து செய்ததாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில், சென்னையில் வழக்குரைஞரின் ஆலோசனையைப் பெற வந்த குப்புசாமி, ஊர் திரும்பவில்லை எனக் கூறி அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உத்தரவிட வேண்டும் என, அவரது சகோதரர் பக்தவச்சலம் சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனுவைத் தாக்கல் செய்தார்.
இந்த மனு நீதிபதிகள் கிருபாகரன், ஹேமலதா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தபோது, நேரில் ஆஜரான குப்புசாமி தனது புகார் மீது வழக்குப்பதிவு செய்யத் தவறிய காவல்துறையினருக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், தனக்கு காவல்துறை பாதுகாப்பு வழங்க உத்தரவிட வேண்டும் எனவும் மனுத்தாக்கல் செய்தார்.