தமிழ்நாடு

tamil nadu

By

Published : Feb 10, 2022, 9:40 PM IST

ETV Bharat / city

"எங்களை கோழைத்தனமாக தாக்க வேண்டாம்" - அண்ணாமலை

ஏழைகளுக்காக உழைக்கும் எங்களை கோழைத்தனமாக தாக்க வேண்டாம். அச்சுறுத்தல்களுக்கு பாஜக அஞ்சாது என்று தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

party-chief-annamalai-statement-on-petrol-bomb-hurled-at-bjp-office-chennai
party-chief-annamalai-statement-on-petrol-bomb-hurled-at-bjp-office-chennai

சென்னை:இதுகுறித்து தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில், "சென்னையில் உள்ள பாஜக அலுவலகமான கமலாலயத்தின் மீது இன்று அதிகாலை பெட்ரோல் குண்டுகள் வீசி, கோழைத்தனமான ஒரு தாக்குதல் நடத்தப்பட்டிருக்கிறது. சம்பவம் நடைபெற்றவுடன் மிக விரைவாக செயல்பட்ட காவல்துறை, முதல் தகவல் அறிக்கையை பதிவு முன்னரே, தடயவியல் நிபுணர்களைக் கூட அழைக்காமல், அவசர அவசரமாக குற்ற நிகழ்வு இடத்தை தூய்மைப்படுத்தி இருக்கிறார்கள்.

தமிழ்நாடு காவல்துறையின் இந்த அதிவேக நடவடிக்கை எங்களுக்கு பலத்த சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. எதற்காக ஆதாரங்களை எல்லாம் அழிக்கும் விதத்தில் காவல்துறை செயல்பட்டது. குற்றவாளிகள் யார் சொல்லி இதை செய்தார்கள் என்று தெரியவேண்டும். இதையெல்லாம் தனிமனிதர் செய்யவாய்ப்பில்லை. இதற்குப்பின் உள்ள மிகப் பெரிய சதியைக் கண்டு பிடிக்க வேண்டும்.

ஆகவேதான் இதனை தேசியப் புலனாய்வு முகமை (என்ஐஏ) விசாரிக்கவேண்டும் எனக் கோருகிறோம். நேற்று ஒரே நாளில் பாரதிய ஜனதா கட்சியின் தேர்தல் பணிமனைகள் மாநிலம் முழுவதும் குறிவைத்து தாக்கப்பட்டது. நாகப்பட்டினத்தில் இளைஞர் அணியின் துணைத் தலைவர் புவனேஸ்வரன் கார் எரிக்கப்பட்டுள்ளது.

இதேபோல, சென்னை திருவிக நகர் 75ஆவது வார்டு பாஜக வேட்பாளர் ரேணுகா சகாதேவன் பணிமனையும், திருப்பூர் 44ஆவது வார்டு வேட்பாளர் பாஜக சிவகுமார் பணிமனையும், வேலூர் நகராட்சி 52ஆவது வார்டு வேட்பாளர் கார்த்திகேயன் தேர்தல் பணிமனையும் எரிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவங்கள் தமிழ்நாடு முழுக்க ஒரே இரவில் நடைபெறும் ஒரே மாதிரியான தாக்குதல்கள் இதன் பின்னால் மிகப்பெரிய சதித்திட்டம் இருப்பதை அம்பலப்படுத்துகிறது.

திமுக ஆட்சியில் மக்களைவிட சமூக விரோதிகள் நலமாக இருக்கிறார்கள். சட்டம் ஒழுங்கும் தமிழ்நாட்டில் கண்மூடிப்போனது. காவல்துறையின் கரங்கள் கட்டப்பட்டு விட்டது. மக்களின் ஏகோபித்த ஆதரவுடன் பாரதிய ஜனதா கட்சி மிகப்பெரிய எழுச்சியை இந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் பெற உள்ளது பலரின் கண்களை உறுத்துகிறது.

திமுக ஆட்சிக்கு வந்ததும் எனக்கு வழங்கப்பட்ட பாதுகாப்பு குறைக்கப்பட்டது. என் தொலைபேசி இன்றளவும் தொடர்ந்து ஒட்டுக் கேட்கப்படுகிறது. கட்சி அலுவலகத்திற்கு வழங்கப்பட்ட பாதுகாப்பும் குறைக்கப்பட்டது. பெட்ரோல் குண்டு வீசியதாக கைது செய்யப்பட்டிருக்கும் நபர் காவல்துறையின் குற்ற பட்டியலில் உள்ள நபர் என்றும் சமீபத்தில்தான் அவர் சிறையிலிருந்து விடுதலை ஆனதாகவும் காவல்துறை தெரிவிக்கிறது.

நீட் தேர்வில் பாஜகவின் நிலைப்பாட்டை எதிர்த்து கண்டிக்கும் வகையில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக காவல்துறையின் செய்திக் குறிப்பு தெரிவிக்கிறது. விசாரணை தொடங்கும் முன்னரே எப்படி அதன் போக்கை தீர்மானிக்க முடிகிறது. சாட்சியங்களைக் கலைக்க முடிகிறது. இதே போலத்தான் அரியலூர் மாணவி லாவண்யா வழக்கிலும் காவல்துறை அவசரம் அவசரமாகச் செயல்பட்டது.

வழக்கும் நீதிமன்றத்தால் சிபிஐக்கு மாற்றப்பட்டது. ஆகவே இந்த சம்பவத்தையும் தேசியப் புலனாய்வு முகமை (என்ஐஏ) விசாரிக்க வேண்டும். அப்போதுதான் உண்மைகள் வெளிப்படும். பாஜக இதுபோன்ற அச்சுறுத்தல்களுக்கு எல்லாம் அஞ்சாது, பாதுகாப்பைக் கேட்டுக் கெஞ்சாது. ஆளும் கட்சியின் அடாத செயல்களை கண்டித்து, நியாத்திற்காக குரல் கொடுக்கும் நாங்கள், பாரதியின் ஆத்திச்சூடியின்படி அச்சம் தவிர்த்து கொள்கையுடன் வாழ்பவர்கள்.

சென்னை பாஜக அலுவலகத்தின் மீது பெட்ரோல் குண்டுகளை வீசுவதால் எங்கள் தன்னம்பிக்கையைத் தகர்த்து விடலாம் என்று யாராவது நினைத்தால் அது தவறு. இன்று காலை நடைபெற்ற சம்பவத்தால் நாங்கள் மிகுந்த புதிய எழுச்சியுடன். புதிய உத்வேகத்துடன், புதிய வலிமையுடன், உறுதியுடன், தீரத்துடன் எங்கள் இலக்கை நோக்கி இன்னம் வேகம் எடுப்போம்" எனக் குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிங்க:பாஜக அலுவலகம் மீது பெட்ரோல் குண்டு வீச்சிற்கு கடும் கண்டனம் - ஓபிஎஸ்

ABOUT THE AUTHOR

...view details