மக்கள் நல்வாழ்வு துறை வெளியிட்டுள்ள கொரோனா வைரஸ் கண்காணிப்பு குறித்த தகவலில்,
சமீபத்தில் ஏற்பட்ட கொரோனா வைரஸ் தாக்குதல் பாதிப்புகள் 118 நாடுகளில் உள்ளதால், சர்வதேச பொது சுகாதார அவசர நிலை பிரகடனம் அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசு இந்த நோய் வராமல் தடுப்பதற்கு தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மத்திய அரசின் வழிகாட்டுதல் அடிப்படையில் மேற்கொண்டு வருகிறது.
வெளிநாடுகளிலிருந்து விமானம் மூலம் வரும் அனைத்து பயணிகளும் இந்தியாவில் 30 விமான நிலையங்களில் உடல் வெப்பப் பரிசோதனை செய்யப்படுகின்றனர்.
தமிழ்நாட்டை பொறுத்தவரை சென்னை, திருச்சி, மதுரை மற்றும் கோவை என நான்கு விமான நிலையங்களில் தற்போதுவரை (13ஆம் தேதி) 1 லட்சத்து 61 ஆயிரத்து 240 பயணிகள் விமான நிலையங்களில் வைத்து வெப்ப சோதனை செய்யப்பட்டுள்ளனர். அவர்களில் ஆயிரத்து 406 பயணிகள் வீட்டுக்கு அனுப்பப்பட்டாலும், மக்கள் நல்வாழ்வுத் துறையின் தொடர் கண்காணிப்பில் உள்ளனர்.
மருத்துவமனையில் 6 பயணிகள் அனுமதிக்கப்பட்டு தனி வார்டில் தொடர் கண்காணிப்பில் இருந்து வருகிறார்கள். 77 பயணிகளின் ரத்தப் பரிசோதனை மாதிரிகள் பெறப்பட்டன. இவை சென்னை கிண்டியில் உள்ள கிங் நோய் தடுப்பு ஆராய்ச்சி நிலையம், புனே மற்றும் தேனியிலுள்ள தேசிய வைரல் நோய் தடுப்பு நிறுவனத்தில் பரிசோதனை செய்யப்பட்டது. அதில், 76 பயணிகளுக்கு நோய் தொற்று இல்லை எனவும், ஒருவருக்கு நோய்தொற்று உள்ளது என கண்டறியப்பட்டது.
ஓமன் நாட்டிலிருந்து பயணித்து வந்த நபருக்கு கொரோனா இருப்பது கண்டறியப்பட்டு, சென்னை ராஜீவ் காந்தி அரசு பொதுமருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
அவரது ரத்த மாதிரிகள் இரண்டு முறை சோதனை செய்யப்பட வேண்டும். முதலில் சோதனை செய்யப்பட்ட பின்னர், 24 மணி நேரம் கழித்து மீண்டும் ரத்தம் பரிசோதனை செய்ததில் தொற்று சரியாகி உள்ளது என தெரியவந்துள்ளது.
ஆனாலும் அவர் மருத்துவமனையில் தொடர் கண்காணிப்பில் இருந்து வருகிறார். அவருடன் தொடர்புடையவர்களை மக்கள் நல்வாழ்வுத்துறையினர் அவரது வீட்டில் வைத்து கண்காணித்து வருகின்றனர். தற்போது அவர்கள் அனைவரும் நலமுடன் உள்ளனர்.
சீனா, ஹாங்காங், ஈரான், கொரியா, இத்தாலி, ஜப்பான், தாய்லாந்து, சிங்கப்பூர், ஈரான், மலேசியா, பிரான்ஸ், ஸ்பெயின், ஜெர்மனி மற்றும் கொரோனா வைரஸ் தாக்குதல் உள்ள 19 நாடுகளிலிருந்து வந்தவர்கள் தொடர்ந்து 28 நாட்களுக்கு கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர் என அதில் கூறப்பட்டுள்ளது.