தமிழ்நாடு

tamil nadu

By

Published : Oct 29, 2020, 3:32 PM IST

ETV Bharat / city

கரோனாவிலும் தோற்று கனமழைக்கும் தோற்று நிற்கிறது அதிமுக அரசு!

சென்னை: ஊழலில் ஊறித்திளைக்கும் எடப்பாடி அரசால் முடியாவிட்டால், பேரிடர் மீட்புப்படையை அழைத்து சென்னை மாநகரை காப்பாற்ற வேண்டும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

stalin
stalin

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ வடகிழக்கு பருவமழை தொடங்குவது முன்கூட்டியே தெரிந்தும், முதலமைச்சர் பழனிசாமியின் அலட்சியத்தால், ஒரு நாள் மழையை கூடத் தாங்க முடியாமல் சென்னை மாநகரம் வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது. இன்னும் தொடரப்போகும் வடகிழக்குப் பருவமழையால், சென்னை மீண்டும் ஒரு ’டிசம்பர் 2015’ வெள்ள அபாயத்தை சந்திக்க போகிறதோ என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.

வடிகால்வாய்களை முன்கூட்டியே தூர்வாரி சீரமைக்க 750 கோடி ரூபாய்க்கு மேல் நிதி ஒதுக்கியும், அதில் உள்ளாட்சித்துறை அமைச்சருக்கு வேண்டிய ஒப்பந்தக்காரர்களுக்கு டெண்டர்கள் வழங்கப்பட்டு முறைகேடு நடைபெற்றது. ஆனால் லஞ்ச ஒழிப்புத்துறையும், சென்னை மாநகராட்சியின் விஜிலென்ஸ் பிரிவும் இது குறித்து விசாரிக்க முன்வரவில்லை. விளைவு, அமைச்சர் வேலுமணியின் ஊழலுக்கு அதிகாரிகள் அனைவரும் துணை போய், வடகிழக்கு பருவமழை முன்னேற்பாடுகளை கோட்டை விட்டுள்ளனர்.

கரோனாவோ, டிசம்பர் 2015 வெள்ளமோ, இந்த கனமழையோ எதையுமே எதிர்கொள்ளும் அடிப்படை அருகதையை அதிமுக அரசு இழந்து நிற்கிறது. வானிலை மையம் எச்சரித்தும், ஒவ்வொரு பணிக்கும் கோடிக்கணக்கான ரூபாய்களை ஒதுக்கி அதை செலவிடாமலேயே சுருட்டுவது எப்படி என்ற ஊழல் கலையின் ஊற்றாக அதிமுக அரசு இருப்பதால், உள்ளாட்சித்துறை அமைச்சர் வேலுமணி, ஊழல் நாயகனாக வலம் வருகிறார்.

கரோனாவில் தோற்ற சென்னை, தற்போது ஒரேயொரு கன மழைக்கும் தோற்றிருப்பதற்கு முதலமைச்சர் பழனிசாமியும், அமைச்சர் வேலுமணியும் வெட்கப்பட வேண்டும். மாநகருக்கு உள்ளாட்சி தேர்தலை நடத்தியிருந்தால், குறைந்தபட்சம் கவுன்சிலர்களாவது மக்களோடு துணைநின்று, குறைகளைத் தீர்த்து வைத்திருப்பார்கள். எனவே, அவசரகால நடவடிக்கைகளை மேற்கொண்டு, மக்களுக்கு போதிய பாதுகாப்பு ஏற்பாடுகள், உணவு உள்ளிட்டவற்றிற்கு ஏற்பாடு செய்ய வேண்டும்.

எடப்பாடி அரசால் முடியவில்லை என்றால், தயவு செய்து பேரிடர் மீட்புப்படையை அழைத்து போர்க்கால நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்“ என்று வலியுறுத்தியுள்ளார்.

இதையும் படிங்க:சென்னையில் விட்டுவிட்டு மழை தொடரும்!

ABOUT THE AUTHOR

...view details