கரோனா பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில் தமிழ்நாடு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டது. அதிக அளவில் பரிசோதனை செய்து பரவலை குறைத்தது. நாட்டிலேயே கரோனாவால் உயிரிழப்போர் விகிதம் தமிழ்நாட்டில்தான் குறைவு. இது, மாநிலம் சுகாதார கட்டமைப்பில் வலுவாக உள்ளதை காட்டுகிறது என சமூக ஆர்வலர்கள் பாராட்டு தெரிவித்தனர்.
இந்நிலையில், மாநிலத்தில் லட்சக்கணக்கானோர் சிடி ஸ்கேன் சோதனையை மேற்கொண்டதன் மூலம் தமிழ்நாடு சுகாதாரத்துறையில் சாதனை படைத்துள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜய பாஸ்கர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், "கரோனா நோயை கண்டறிதலிலும் அதில் உள்ள கோளாறுகளை புரிந்து கொள்வதிலும் சிடி ஸ்கேன் பெரிய பங்காற்றுகிறது.
கரோனா பரவலை கண்டறியும் நோக்கில் 1,20,541 பேர் சிடி ஸ்கேன் சோதனையை மேற்கொண்டனர். தமிழ்நாடு சுகாதாரத்துறை சிறப்பாக செயல்பட்டுவருவதை இது எடுத்துரைக்கிறது. கரோனா பரவலை தமிழ்நாடு பெரிய அளவில் குறைத்துள்ளது. சிகிச்சை பெற்றுவருவோரின் எண்ணிக்கை கட்டுக்குள் உள்ளது" என பதிவிட்டுள்ளார்.