மருத்துவ மேற்படிப்பிற்கான நீட் தேர்வில் தங்களை விட குறைவான மதிப்பெண்கள் பெற்றவர்களுக்கு இடமளிக்கப்பட்டதை எதிர்த்தும், நிரப்பப்படாத காலியிடங்களுக்கு கலந்தாய்வு நடத்தி மாணவர் சேர்க்கை வழங்கக் கோரியும் மருத்துவர்கள் கீதாஞ்சலி, சந்தோஷ்குமார் உள்ளிட்டோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர்.
இந்த மனுக்களை விசாரித்த உயர் நீதிமன்றம், இந்த விவகாரம் குறித்து சிபிசிஐடி விசாரணைக்கு கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் உத்தரவிட்டதுடன், மருத்துவக் கல்வி இயக்குநரக அதிகாரிகளுக்கும் தனியார் கல்லூரிகளுக்கும் இடையிலான சதி உள்ளதா? அவ்வாறு இருந்தால் அதன் பின்னணியில் உள்ளவர்கள் யார்? தனியார் கல்லூரிகள் கூடுதல் கட்டணம் வசூலித்திருந்தால் எவ்வளவு என்ற விவரங்கள் என்பது குறித்து விசாரிக்க உத்தரவிட்டிருந்தது.
இந்த வழக்கு கடந்த வாரம் நீதிபதி புகழேந்தி முன்னிலையில் விசாரணைக்கு வந்தபோது, விசாரணை அறிக்கையை சிபிசிஐடி தாக்கல் செய்தது. இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, அரசு தரப்பில் தலைமை வழக்கறிஞர் விஜய் நாராயண் ஆஜராகி, கலந்தாய்விற்கு பிறகு மாணவர்களின் பட்டியல் அந்தந்த கல்லூரிகளுக்கு அனுப்பப்பட்டதாகவும், கரோனா கட்டுப்பாடுகளால் கடந்த ஆண்டு காணொலி மூலமாக மட்டுமே கலந்தாய்வு நடைபெற்றதாகவும், அதில் இடம் கிடைத்த சிலரும், தாங்கள் விரும்பிய பாடப்பிரிவு கிடைக்காத சிலரும் கல்லூரிகளை அணுகாததால் இடங்கள் காலியாக இருந்ததாகக் குறிப்பிட்டார்.