கரோனா பரவலைத் தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால், பாதிப்படைந்திருக்கும் ஏழை, எளியோருக்கு திமுக சார்பாக "ஒன்றிணைவோம் வா" என்ற திட்டத்தின் அடிப்படையில் உதவிகள் நிறைவேற்றப்பட்டு வருகின்றன.
அந்த வகையில் வெளிநாடு வாழ் இந்தியர்களிடம் இன்று உரையாற்றிய திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், அது தொடர்பாக மத்திய, மாநில அரசுகளிடன் அவர் முன்வைத்த கோரிக்கைகளாவது,
"கரோனா பேரிடர் காலத்தில் மக்களின் துயர் துடைக்கும் வகையில், திமுக மேற்கொள்ளும் பணிகள் குறித்து காணொலி வாயிலாக நாள்தோறும் உரையாடி வருகிறேன். கட்சி நிர்வாகிகள், மருத்துவர்கள், தொழில்துறையினர், வணிகர்கள், பொதுமக்கள் என பலருடனும் தொடர்ந்து உரையாடி, அவர்களின் நிலையைக் கேட்டறிந்து நிவாரணப் பணிகளை திமுக மேற்கொண்டு வருகிறது.
தமிழ்நாட்டில் வாழும் தமிழர்கள் மட்டுமின்றி, பிற மாநிலங்களில் சிக்கித் தவிக்கும் தமிழர்களின் நலனிலும் திமுக அக்கறை செலுத்தி வருகிறது. அதன் தொடர்ச்சியாக, வெளிநாடுகளில் வாழும் தமிழர்களின் நிலை அறிந்திட இன்று (28-4-2020) வளைகுடா நாடுகளைச் சேர்ந்த தமிழர்களுடன் காணொலியில் உரையாடினேன்.
வளைகுடா நாடுகள் மற்றும் பிற வெளிநாடுகளில் தவிக்கும் தமிழர்கள் பலர் தாயகம் திரும்பிட விரும்புகிறார்கள் என்பது காணொலி உரையாடலின் வாயிலாகத் தெரியவந்தது. விமானச் சேவைகள் ரத்து, விசா உள்ளிட்ட நடைமுறைச் சிக்கல்களால் அயல் நாடுகளில் தவிக்கும் தமிழர்களைத் அழைத்துவர மத்திய, மாநில அரசுகள் உரிய ஏற்பாடுகளை் செய்ய வேண்டும்.
வெளிநாடுகளில் உள்ள இந்தியர்களைத் தாயகம் அழைத்து வருவது குறித்து ஏற்கனவே அனைத்து மாநிலத் தலைமைச் செயலர்களுக்கும் மத்திய கேபினட் செயலர் கடிதம் எழுதி, தாயகம் திரும்புகிறவர்களுக்கான உரிய ஏற்பாடுகள் குறித்துக் கேட்டிருக்கிறார். கேரள அரசு சார்பில் விருப்பத்தை பதிவு செய்ய இணையதளம் தொடங்கப்பட்டது. 12 மணிநேரத்தில் வெளிநாடு வாழ் கேரளத்தினர் ஒரு லட்சம் பேர் அதில் பதிவு செய்துள்ளனர்.
அதுபோல் தமிழ்நாடு அரசும் விரைந்து செயல்பட்டு, இணையதளம் மூலமாக பதிவைத் தொடங்கி, மத்திய அரசின் அனுமதியுடன் தாயகம் திரும்ப விரும்பும் தமிழர்களை அழைத்து வருவதற்கும், மருத்துவ ரீதியாக கண்காணிப்பதற்கும் உரிய ஏற்பாடுகளை விரைந்து செய்ய வேண்டும்", என்றார்