தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

'காவல்துறைக்கு உபகரணங்கள் வாங்கியதில் ஏற்பட்ட ஊழலை விசாரிக்க வேண்டும்' - ஸ்டாலின் அறிக்கை - MK Stalin statement on Police equipment issue

சென்னை: காவல் துறைக்கு உபகரணங்கள் வாங்கியதில் நடைபெற்ற ஊழல் தொடர்பான வழக்கை லஞ்ச ஒழிப்புத்துறை உடனடியாக விசாரிக்க வேண்டும் என்று, திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

stalin

By

Published : Nov 13, 2019, 7:41 PM IST

இது தொடர்பாக திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் இன்று அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில்,

'காவல் துறைக்கு உபகரணங்கள் கொள் முதல் செய்ததில் ரூ.350 கோடி ஊழல் நடைபெற்றது தொடர்பாக வழக்கில் உள்துறைச் செயலாளரை விசாரிக்க ஆணையிட்டும், இன்னும் லஞ்ச ஊழல் ஒழிப்புத் துறை எந்தவித விசாரணையும் நடத்தாமல் இருப்பதாக இன்று செய்தி வெளிவந்திருக்கிறது. இது தொடர்பாக, அதிமுக அரசு ஊழலை ஊறப்போடவும், விசாரணையை முடிந்தவரை தாமதப்படுத்தவும் முயற்சி செய்கிறது என்பதை உணர்த்துகிறது.

ஊழல் புகாருக்கு ஆளான டிஜிபி அலுவலகத்தில் உள்ள காவல்துறை தொழில்நுட்பப் பிரிவு கண்காணிப்பாளரை அதே பதவியில் வைத்துக் கொண்டு, இந்த ஊழல் தொடர்பான அலுவலகக் கோப்புகளை பத்திரமாக வைத்திருந்த அமைச்சுப் பணியாளர் ராஜா சிங்கை மட்டும் திடீரென்று ராமநாதபுரத்துக்கு மாற்றியிருப்பது ஆதாரங்களை அழிக்கும் முயற்சி என்ற சந்தேகம் எழுகிறது. காவல்துறை தொழில் நுட்பப் பிரிவில் உள்ள கண்காணிப்பாளருக்கு, ஆணையிட்ட உயர் காவல்துறை அலுவலர்கள், யார் மீதும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்காமல், தமிழ்நாடு காவல்துறையை ஊழல் துறையாக மாற்றி வரும் அதிமுக அரசின் செயல் கண்டனத்திற்குரியது.

2019ஆம் ஆண்டு ஜனவரி மாதம் வெளிவந்த ஊழல் புகார் குறித்து, 'குட்கா' ஊழல் வழக்கில் ரெய்டு செய்யப்பட்ட தமிழ்நாடு காவல்துறை டிஜிபி டி.கே. ராஜேந்திரன் ஓய்வு பெறும் வரை, எந்த விசாரணையும் நடத்தாமல் கிடப்பில் இருந்தது. பின்னர், புதிய டிஜிபியாக பொறுப்பேற்ற திரிபாதி, இந்த ஊழலை விசாரிக்குமாறு உள்துறை செயலாளருக்குக் கடிதம் அனுப்பினார். அதையடுத்து, கடந்த செப்டம்பர் மாதம் விசாரணைக்கு உத்தரவிட்டார் உள்துறைச் செயலாளர்.

சுதந்திரமாக செயல்பட வேண்டிய லஞ்ச ஊழல் ஒழிப்புத்துறையும், நேர்மையானவர் என்று காவல் துறை வட்டாரத்தில் அறியப்படும் இயக்குநர் விஜயகுமார் ஐபிஎஸ்ஸும் ஊழல் அலுவலர்களைக் காப்பாற்றுவது ஏன்? என்பதுதான் புதிராக உள்ளது. ஒரு அரசு ஊழியர் மீது புகார் வந்து விட்டாலே, அவரை வேறு பதவிக்கு மாற்றுமாறு அரசுக்கு அறிவுறுத்தும் லஞ்ச ஊழல் ஒழிப்புத்துறை, காவல்துறைக்கு உபகரணங்கள் வாங்கிய புகாரில் ஈடுபட்ட அலுவலர்களை மாற்ற இதுவரை அரசுக்கு ஏன் பரிந்துரை செய்யவில்லை?

கூடுதல் பொறுப்பாக மாநில விஜிலென்ஸ் ஆணையத்தின் தலைவர் பதவியையும் தன்னிடமே வைத்துள்ள தலைமைச் செயலாளர், இந்த மெகா ஊழல் பற்றியும், லஞ்ச - ஊழல் ஒழிப்புத்துறையில் தாண்டவமாடும் அரசியல் தலையீடு குறித்தும் கண்டுகொள்ளாமல் இருப்பது ஏன்?

விழித்திருக்கும் போதும், இரவில் தூங்கும் போதும் 'கமிஷன்', 'கரப்ஷன்', 'கலெக்‌ஷன்' என்று அதிமுக அரசு செயல்பட்டு தமிழ்நாட்டில் ஊழலாட்சி நடத்தி வருவதும், அதைக் கண்டுகொள்ளாமல், ஏதோ காரணங்களுக்காக அரசைக் காப்பாற்றுவதும், இதுவரை இல்லாத அளவிற்கு ஏற்பட்டிருக்கும் மகா கேடு என்று தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.

எனவே, காவல் துறைக்கு உபகரணங்கள் வாங்கிய வழக்கை உடனடியாக லஞ்ச ஒழிப்புத்துறை விசாரிக்க வேண்டும் என்றும், மக்களின் பாதுகாப்புக்கு உத்தரவாதம் அளிக்கும் காவல் துறையிலேயே ஊழல் செய்தவர்களைப் பிடித்து குற்றவாளிக் கூண்டில் நிறுத்தி, உரிய தண்டனை பெற்றுத் தருவது மட்டுமின்றி, ஊழல் சொத்துக்களை பறிமுதல் செய்து நம்பகத்தன்மையை நிலை நாட்ட வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறேன்' இவ்வாறு ஸ்டாலின் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிங்க:

விவசாயிகளின் அழுகுரலைத் தீர்க்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்குமா?

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details