தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

டேபிள் டென்னிஸ் வீரர் விஸ்வா தீனதயாளன் உயிரிழப்பு: மு.க.ஸ்டாலின் இரங்கல்

மேகாலயா மாநிலத்தில் நிகழ்ந்த விபத்தில் தமிழ்நாடு டேபிள் டென்னிஸ் வீரர் விஸ்வா தீனதயாளன் உயிரிழந்தார். இந்நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவரது குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்து ரூ.10 லட்சம் நிதியுதவி அறிவித்துள்ளார்.

By

Published : Apr 18, 2022, 12:06 PM IST

Updated : Apr 18, 2022, 12:14 PM IST

மு.க.ஸ்டாலின் இரங்கல்
மு.க.ஸ்டாலின் இரங்கல்

சென்னை: 18 வயதான விஸ்வா தீனதயாளன் கௌகாத்தியில் இருந்து ஷில்லாங் நகருக்கு டாக்சியில் சென்றபோது நேற்று (ஏப்.17) விபத்தில் சிக்கினார். 83ஆவது சீனியர் தேசிய மற்றும் மாநிலங்களுக்கிடையேயான டேபிள் டென்னிஸ் போட்டி இன்று (ஏப்.18) நடைபெறுகிறது.

இந்த டேபிள் டென்னிஸ் போட்டியில் கலந்துகொள்வதற்காக, ஏப்.18ஆம் தேதி விஸ்வா தீனதயாளன் டாக்சியில் ஷில்லாங் நோக்கி சென்றார். அவருடன் சக நண்பர்கள் ரமேஷ் சந்தோஷ் குமார், அபினாஷ் பிரசன்னாஜி ஸ்ரீநிவாசன், கிஷோர் குமார் ஆகிய மூவரும் உடனிருந்தனர்.

இந்த நால்வரும் பயணித்த டாக்சி, உமிலி செக்போஸ்ட் அருகில் உள்ள சங்பங்லா என்ற இடத்தில் கோர விபத்தில் சிக்கியது. எதிரே வந்த 12 சக்கர சரக்கு வாகனம் டாக்சி மீது மோதியதில் டாக்சி டிரைவர் சம்பவ இடத்திலே உயிரிழந்தார். விஸ்வா மற்றும் அவரது மூன்று நண்பர்களும் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

இந்த நிலையில், வடகிழக்கு இந்திரா காந்தி பிராந்திய மருத்துவ மற்றும் மருத்துவ அறிவியல் மருத்துவமனையில் விஸ்வா தீனதயாளன் உயிரிழந்தார். மற்ற மூவருக்கும் மருத்துவமனையில் தீவிர சிகிக்சை அளிக்கப்பட்டுவருகிறது. டேபிள் டென்னிஸ் வீரரான விஸ்வா தீனதயாளன் பல்வேறு தேசிய மற்றும் சர்வதேச பதக்கங்களை பெற்றுள்ளார்.

இந்த விபத்தில் உயிரிழந்த விஸ்வா தீனதயாளன் குடும்பத்தினருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். இது குறித்து அவரது ட்விட்டர் பதிவில், "தமிழ்நாட்டைச் சேர்ந்த டேபிள் டென்னிஸ் வீரர் விஷ்வா தீனதயாளன் நேற்று மேகாலயா மாநிலத்தில் டேபிள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் பங்கேற்கச் சென்றபோது, அங்கு சாலை விபத்தில் உயிரிழந்தார் என்ற செய்தி கேட்டு மிகுந்த துயரமடைந்தேன்.

எதிர்காலத்தில் எத்தனையோ உலக சாதனைகளைப் படைப்பார் என்று நாம் எண்ணியிருந்த நிலையில், மிகவும் வருந்தத்தக்க வகையில் அவர் நம்மை விட்டுப் பிரிந்துவிட்டார். இது அவரது பெற்றோருக்கும், குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும் எத்தகைய துயரத்தை அளித்திருக்கும் என்று எண்ணிப் பார்க்கிறேன். அவர்களுக்கு என்னுடைய ஆழ்ந்த இரங்கலையும், வருத்தத்தையும் தெரிவித்துக்கொள்கிறேன்" எனப் பதிவிட்டுள்ளார்.

மேலும், விஷ்வா தீனதயாளன் குடும்பத்தினருக்கு முதலமைச்சர் நிவாரண நிதியிலிருந்து ரூ.10 லட்சம் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:தமிழக டேபிள் டென்னிஸ் வீரர் விபத்தில் உயிரிழப்பு!

Last Updated : Apr 18, 2022, 12:14 PM IST

ABOUT THE AUTHOR

...view details