சென்னை:உரிய அனுமதிகளைப் பெறாமல் அடுக்குமாடி குடியிருப்புகளைக்கட்டியுள்ளதாக தொடரப்பட்ட வழக்கில், சம்பந்தபட்டவர்களுக்கு மாற்று இடம் வழங்கி, சரியாக ஆறு வாரங்களுக்குள் கட்டடத்தை அரசிடம் ஒப்படைக்கவேண்டும் எனவும்; தமிழ்நாடு அரசு இரு வாரங்களுக்குள் அனுமதியில்லாமல் கட்டப்பட்ட கட்டத்தை இடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும்; கட்டடப் பணிகள் முடிவடைந்த பிறகே கட்டட பணிமுடிப்பு சான்றை வழங்கவேண்டும் எனவும் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
புரசைவாக்கத்தைச்சேர்ந்த நியூ வீனஸ் டெவலப்பர்ஸ் என்ற கட்டுமான நிறுவனம், கொசப்பேட்டையில் உரிய அனுமதிகளைப் பெறாமல் அடுக்குமாடி குடியிருப்புகளை கட்டியுள்ளதாகக்கூறி, குடியிருப்புவாசிகளுக்கு சென்னை மாநாகராட்சி நோட்டீஸ் அனுப்பியது. இதனால், விதிமீறல்களை சரி செய்ய அனுமதி கோரியும், சீல் வைப்பது போன்ற கடும்நடவடிக்கைகள் எடுக்கத்தடை கோரியும், குடியிருப்புவாசிகள் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருந்தனர்.
இந்த வழக்கை இன்று (ஆக.24) விசாரித்த நீதிபதிகள் மகாதேவன் மற்றும் முகமது சஃபீக் ஆகியோர் அடக்கிய அமர்வு, சட்டவிரோதமாக கட்டடங்கள் கட்டி விட்டு, பின் அதனை வரைமுறைப்படுத்த கோருவதை ஊக்குவிக்கக் கூடாது எனவும்; அதை அனுமதித்தால் அனுமதியை மீறி கட்டுமானங்களைக் கட்டிவிட்டுப்பின், அதை சரிசெய்து கொள்ளலாம் என்ற தவறான தோற்றத்தை ஏற்படுத்தும் எனத் தெரிவித்துள்ளது.
அடுக்குமாடி குடியிருப்புகளின் கட்டடப்பணி முடிப்பு சான்று பெற்ற பிறகே குடியிருப்புகள் விற்கப்படும் என கட்டுமான நிறுவனங்களிடம் உத்தரவாதம் பெற வேண்டும் என அலுவலர்களுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.