சென்னை: தூத்துக்குடி மாவட்டம் கடம்பூர் பேரூராட்சி தேர்தலை ரத்து செய்து பிப்ரவரி 7ஆம் தேதி மாநில தேர்தல் ஆணையம் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து பேரூராட்சியில் உள்ள மூன்று வார்டுகளின் சுயேச்சை வேட்பாளர்கள் வழக்கு தொடர்ந்துள்ளனர்.
1ஆவது வார்டு சுயேச்சை வேட்பாளர் எஸ்.வி.எஸ்.பி.நாகராஜா, 2ஆவது வார்டு சுயேச்சை வேட்பாளர் ராஜேஸ்வரி, 11ஆவது வார்டு வேட்பாளர் சிவகுமார் ஆகியோர் மனு தாக்கல் செய்தனர்.
அந்த மனுக்கள், "மூன்று வார்டுகளிலும் திமுக வேட்பாளர்களான ஜெயராஜ், சண்முகலட்சுமி, சின்னதுரை ஆகியோரின் வேட்புமனுக்களை முன்மொழிந்தவர்களின் கையெழுத்துகள் போலியாக பதிவு செய்யப்பட்டுள்ளன.
வேட்பு மனு பரிசீலனையின் போது மூன்று வார்டுகளிலும் முன்மொழிந்ததாக கூறப்பட்டவர்கள் ஆட்சேபம் தெரிவித்ததால் மூன்று திமுக வேட்பாளர்களின் வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டது.
வேறு வேட்பாளர்கள் இல்லாத நிலையில் தங்களை வெற்றி பெற்றவர்களாக அறிவிக்காமல், ஒட்டுமொத்த பேரூராட்சியின் தேர்தலை ரத்து செய்து பிப்ரவரி 7ஆம் தேதி உத்தரவிட்டதாகவும், அரசியல் நிர்பந்தம், நெருக்கடி காரணமாக தேர்தலை ரத்து செய்துள்ளது. மூன்று வார்டுகளின் தேர்தலை ரத்து செய்த உத்தரவை, ரத்து செய்து தங்களை வெற்றி பெற்றவர்களாக அறிவிக்க வேண்டும்" எனக் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இந்த மனுக்களை விசாரித்த தலைமை நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரி, நீதிபதி பரத சக்கரவர்த்தி அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, மாநில தேர்தல் ஆணையம் தரப்பில், இரு வேட்பாளர்கள் கடத்தப்பட்டது, அதிகாரிகள் மீதான தாக்குதல், சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஆகியவற்றின் காரணமாக தேர்தல் ரத்து செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.
ஆனால் மனுதாரர்கள் தரப்பில், யாரும் கடத்தப்படவில்லை என்றும், சம்பந்தப்பட்டவர்களே கோவில்பட்டி நீதிமன்றத்தில் ஆஜராகி வாக்குமூலம் அளித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து கடம்பூர் பேரூராட்சி தேர்தல் தொடர்பான புகார்கள், பதிவான வழக்குகள், சாட்சிகளின் வாக்குமூலங்கள் ஆகியவற்றை தாக்கல் செய்ய மாநில தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட்ட நீதிபதிகள் வழக்கு விசாரணையை ஏப்ரல் 22ஆம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.
இதையும் படிங்க: போலீஸ் கண்முன்னே தவறாக நடக்க முயன்றவரை வெளுத்து வாங்கிய பெண்!