சென்னை:தருமபுரி மாவட்டத்தைச் சேர்ந்த விவசாயி அன்பழகன் மாநில நுகர்வோர் தீர்ப்பாயத்தில் தாக்கல்செய்த மனுவில், தனது மனைவி மணிமேகலை (37) கர்ப்பப்பை ரத்தப்போக்கால் 2012ஆம் ஆண்டு பாதிக்கப்பட்டார். இதனால் தருமபுரி நேதாஜி புறவழிச் சாலையில் உள்ள கே.வி. மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
தனது மனைவியைப் பரிசோதித்த மருத்துவர் கலாவள்ளி, அறுவை சிகிச்சை செய்து கர்ப்பப்பையை அகற்றினால் ரத்தப்போக்கு நிற்கும் எனக் கூறியதால், அதே மருத்துவமனையில் சிறுநீரகவியல் அறுவை சிகிச்சை வல்லுநரான மோகன் செந்தில் (டாக்டர் கலாவள்ளியின் மகன்) மூலம் கர்ப்பப்பை அகற்றப்பட்டது.
தவறான அறுவை சிகிச்சையால் பெண் மரணம்
அறுவை சிகிச்சைக்குப் பிறகும் ரத்தப்போக்கு நிற்காமல் வயிறு வீக்கம் அடைந்து மூச்சுவிட சிரமம் ஏற்பட்டது. இதன் காரணமாக சேலத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட தனது மனைவியைப் பரிசோதித்த மருத்துவர்கள், ஏற்கனவே மேற்கொண்ட அறுவைச் சிகிச்சை முறையாக மேற்கொள்ளப்படவில்லை என்பதால் அதைச் சரிசெய்ய வேண்டும் என்று கூறிய நிலையில் எனது மனைவி மருத்துவமனையில் உயிரிழந்தார்.
தவறான அறுவைச் சிகிச்சையால் எனது மனைவி இறக்க காரணமான மருத்துவர் கலாவள்ளி, அவரது கணவரும், மருத்துவமனை நிர்வாகியுமான மருத்துவர் இளங்கோவன், மருத்துவர் மோகன் செந்தில் ஆகியோர் 30 லட்சம் ரூபாய் தனக்கு இழப்பீடு வழங்க உத்தரவிட வேண்டும்" எனக் குறிப்பிட்டுள்ளார்.