தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

பிரபாகரன் படத்தை வைத்திருந்தால், கைது செய்வீர்களா? வைகோ சாடல் - mdmk vaiko attented in tamil tigers ban ivestigation

சென்னை: விடுதலைப் புலிகள் மீதான தடையை விசாரிக்க டெல்லி உயர் நீதிமன்ற நீதிபதி தலைமையிலான விசாரணை அமர்வு இன்று சென்னை வாலாஜா சாலையிலுள்ள அரசு விருந்தினர் மாளிகையில் நடைபெற்றது. இதில் மாநிலங்களவை உறுப்பினர் வைகோ கலந்துகொண்டு தன் கேள்விகளை முன்வைத்ததோடு, பிரபாகரன் படத்தை வைத்திருப்பவர்கள் மீது அரசு கைது நடவடிக்கையில் ஈடுபடுவது கண்டனத்துக்குரியது என்று வாதிட்டுள்ளார்.

மதிமுக பொதுச் செயலாளர் வைகோ

By

Published : Aug 16, 2019, 7:56 PM IST

விடுதலைப் புலிகள் மீதான தடையை விசாரிக்க டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதி சங்கீதா திங்ரா சேகல் தலைமையில் விசாரணை அமர்வு சென்னை வாலாஜா சாலையிலுள்ள அரசு விருந்தினர் மாளிகையில் இன்றும் நாளையும் நடைபெறவுள்ளது. இன்று நடந்த விசாரணையில் மதிமுக பொதுச் செயலாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான வைகோ பங்கேற்று தன் கேள்விகளை முன்வைத்துள்ளார்.

விசாரணைக்குப் பின் செய்தியாளர்களைச் சந்தித்த வைகோ, “தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான தடையை இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை நீட்டிக்கப்பட்டு பின் 2014இல் அது ஐந்து ஆண்டுகளாக நீட்டிக்கப்பட்டது. தற்போது ஐந்து ஆண்டுகள் முடிவடைந்துள்ளது. விடுதலைப் புலிகள் மீதான தடை சரிதானா என்பதை ஆராய டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதி, தலைமையில் தீர்ப்பாயம் அமைக்கப்பட்டுள்ளது. 2010, 2012, 2014ஆம் ஆண்டுகளில் அமைக்கப்பட்ட தீர்ப்பாயத்தின் நீதிபதிகளாக இருந்தவர்கள், என் தரப்பு வாதத்தையும் கேட்டால் தான் நியாயம் கிடைக்கும் என்கிற உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பைச் சுட்டிக்காட்டி, என்னை அந்த விசாரணையில் பங்கேற்க அனுமதித்தார்கள்.

அதை நான் நீதிபதியிடம் கூறினேன். அவரும் அதனை ஏற்றுக்கொண்டார். ஆனால் சாட்சிகளைக் குறுக்கு விசாரணை செய்ய, இதற்கு முன்பு மூன்று முறை எனக்கு அனுமதி கொடுக்கப்பட்டது. ஆனால் இன்று எனக்கு அனுமதி கொடுக்கப்படவில்லை. என்றாலும் நான் கேள்விகளைக் கேட்டேன். இன்று ஐந்து சாட்சிகளை விசாரித்துள்ளார்கள். விடுதலைப் புலிகளை அழித்துவிட்டொம் என்று சொல்கிறார்கள். ஆனால் பிரபாகரன் படம் போட்ட நாள்காட்டி, புத்தகங்களை விநியோகித்தார்கள் என்று இரண்டு இலங்கைத் தமிழர்களைக் கைது செய்துள்ளனர். நாளைக்கு முக்கியமான சாட்சி வருவதாகக் கூறியிருக்கின்றனர்.

மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, விடுதலை புலிகள் தலைவர் பிரபாகரனுடன்

அதன்பிறகு அக்டோபர் 11 முதல் 14ஆம் தேதி வரை நான்கு நாட்களுக்குக் கோடைக்கானலில் விசாரணை நடக்கும் என்று கூறியுள்ளனர். என்னுடைய கேள்விகளை எழுப்பிய போது கடைசியாக முழு வாதத்தையும் வைத்துக் கொள்ளலாம் என்று கூறியுள்ளனர். எப்படியாவது ஈழத் தமிழரை விடுதலைப் புலிகள் என்று முத்திரை குத்தி தடையை நீட்டிப்பதற்கு எடப்பாடி பழனிசாமி அரசின் க்யூ பிரிவு காவல் துறையினர் முயன்று வருகின்றனர்.

அரசு விருந்தினர் மாளிகையில் நடைபெற்ற விசாரணையில் வைகோ

யாராவது ஈழத் தமிழரைப் பிடித்து எல்.டி.டி.இ என்று முத்திரை குத்த வேண்டியது. பிரபாகரன் படத்தை வைத்திருந்தாளே வழக்கு என்றால் தமிழ்நாட்டில் எல்லாருடைய வீட்டிலும் அவரின் படம் இருக்கிறது. நாளைக்குக் காலை 9.30 மணிக்கு மீண்டும் விசாரணை தொடங்கவுள்ளது. ஏற்கெனவே எல்.டி.டி.இ மீதான தடையை நீக்கக்கோரி உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்துள்ளேன். அதில் வாதாடினேன் ஆனால் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. அந்த மனு இருக்கும்போதே இன்னொரு ரிட் தாக்கல் செய்துள்ளேன். அந்த வழக்கு விசாரணைக்கு வரும்போது நான் என் தரப்பு வாதத்தை முன்வைத்து தடையை நீக்க முயல்வேன்.

தீர்ப்பாயம் ஒரு வழக்கமான நடவடிக்கையாக இருக்கிறது. அதுபற்றி நான் கருத்துச் சொல்வது சரியாக இருக்காது” என்று தெரிவித்தார். மேலும் விடுதலைப் புலிகள் தடையை நீக்க வேண்டும் என்று மற்ற கட்சிகள் குரல் கொடுத்தாலும் இதுபோல் தீர்ப்பாயங்களில் அவர்களுடைய வாதங்களை வைக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது என்ற கேள்விக்கு நான் அடுத்தவர்களைப் பற்றி கருத்துச் சொல்ல விரும்பவில்லை என்று வைகோ கூறினார்.

ABOUT THE AUTHOR

...view details