சென்னை: கே.கே நகரில் உள்ள பத்ம சேஷாத்ரி பள்ளியில் மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக அந்தப் பள்ளி ஆசிரியர் ராஜகோபாலனை காவல் துறையினர் போக்சோ சட்டத்தின்கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர். இதனைத் தொடர்ந்து, பல பள்ளி மாணவிகள் தாங்கள் சந்தித்த பாலியல் தொந்தரவு சம்பந்தமான விஷயங்களை சமூக வலைதளங்களில் பதிவிட்டு, பகிர்ந்து வருகின்றனர்.
குவியும் பாலியல் புகார்கள்
இதனால் சமூக வலைதளம் முழுவதும் இதுபோன் பாலியல் அத்துமீறல்கள் தொடர்பான புகார்கள் குவிந்து வருகின்றன. அதில் குறிப்பாக, சேத்துபட்டில் இயங்கி வரக்கூடிய மகரிஷி வித்யா மந்திர் பள்ளி மாணவிகள், ஆசிரியர் ஆனந்த் மீது கடந்த சில தினங்களாக பாலியல் புகார்கள் தெரிவித்து வருகின்றனர்.
இந்தச் சம்பவம் சர்ச்சையாகிய நிலையில், ஆசிரியர் ஆனந்தை பள்ளி நிர்வாகத்தினர் பணியிடை நீக்கம் செய்து துறை ரீதியான விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், இது தொடர்பாக கீழ்பாக்கம் அனைத்து மகளிர் காவல் துறையினரும் விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.
இந்நிலையில், அந்தப் பள்ளி மாணவிகள் பல முறை ஆசிரியர் ஆனந்த் மீது புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்காததால் தற்போது குழந்தைகள் உரிமைகளுக்கான பாதுகாப்பு ஆணையம், உயர்கல்வித் துறை செயலர், பள்ளி நிர்வாகம் ஆகியவற்றிற்கு பரபரப்பு புகார் ஒன்றை அளித்துள்ளனர்.
'தந்தை மாதிரி' எனக்கூறி தனியாக அழைத்த ஆசிரியர்
அதில், ஆசிரியர் ஆனந்த் கடந்த 2005-2006ஆம் ஆண்டு தனியார் பள்ளி ஒன்றில் பணியாற்றிய போது பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததால் சஸ்பெண்ட் செய்யப்பட்டு இருந்த நிலையில், அவரது விபரங்கள் குறித்து விசாரிக்காமல் மகரிஷி வித்யா மந்திர் பள்ளியில் சேர்த்துள்ளனர். தந்தை எனக்கூறி பல மாணவிகளுக்கு வகுப்பறைகளில் மன ரீதியாகவும், உடல் ரீதியாகவும் ஆனந்த் பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார். இது குறித்து புகார் அளிக்க மாணவிகள் சென்றால் தேர்ச்சி பெறவிடாமல் செய்து விடுவதாகவும் ஆசிரியர் ஆனந்த் மிரட்டி வந்துள்ளார்.
மாணவிகளின் செல்போன் எண்கள், வீட்டு முகவரி போன்றவற்றை ரகசியமாகத் திருடி மாணவிகளை மிரட்டி அதன் மூலம் ஆசிரியர் ஆனந்த் ஆபாச மெசேஜ்களையும் அனுப்பி வந்துள்ளார். மேலும், சிறப்பு வகுப்பு காலை 7 மணிக்கு இருப்பதாக குறிப்பிட்ட மாணவிக்கு மட்டும் மெசேஜ் அனுப்பி பள்ளிக்கு வரவழைத்தும், இரவு நேரத்தில் கோச்சிங் வகுப்பு நடத்தும்போது பாலியல் தொந்தரவு அளித்து வந்துள்ளார். இதுகுறித்து பாதிக்கப்பட்ட மாணவி நிர்வாகத்திடம் புகார் அளித்த நிலையில், அதனை பொய் புகார் என நம்பவைத்தார்.
மாணவிகள் அனுமதியின்றி கட்டிப்பிடிப்பது, முத்தம் கொடுப்பது, மடியில் உட்கார வைப்பது போன்ற வக்கிரமான செயல்களை ஆசிரியர் ஆனந்த் செய்து வந்த போது 11ஆம், 12ஆம் வகுப்பு மாணவிகள் தங்கள் கல்வி பாதிக்கப்படும் என்பதால் பல பெண்கள் புகார் அளிக்காமல் இருந்து வருவதாக அந்தப் புகாரில் கூறியுள்ளனர்.