சென்னை: மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில் இணை ஆணையர் காவேரி செய்தியாளரிடம் கூறும்போது, "மயிலாப்பூர் கபாலீஸ்வரர் திருக்கோயிலுக்குச் சொந்தமான ராமகிருஷ்ணா மடம் சாலையில் உள்ள இடத்தில் மகா சிவராத்திரி நாளான மார்ச் 1ஆம் தேதி மாலை 6 மணிமுதல் இரண்டாம் தேதி காலை 6 மணி வரை கலை நிகழ்ச்சிகள் ஆன்மிகச் சொற்பொழிவுகள், இசை நிகழ்ச்சிகள் சிவமய நாட்டிய நாடகம் போன்ற நிகழ்ச்சிகள் நடத்தப்பட உள்ளன.
மயிலாப்பூர் சுற்றியுள்ள 10 சிவன் கோயில்களுக்கு வருகைதரும் பக்தர்கள் தரிசனம் செய்யவும், அவர்கள் அமர்ந்து ஓய்வு எடுக்கவும் அந்த நேரத்தில் ஆன்மிகம் சார்ந்த பக்தி கலை நிகழ்ச்சிகளை ஒருங்கிணைத்து கண்டுகளிக்கவும் ஏற்பாடுகள்செய்யப்பட்டுள்ளன.
மேலும் பக்தர்களுக்கு அருள்மிகு கபாலீஸ்வரர் கோயிலில் வைத்து பூஜிக்கப்பட்ட ருத்ராட்சம் இலவசமாக வழங்கப்பட உள்ளது. ராமேஸ்வரம் திருக்கோயில், அருள்மிகு கபாலீஸ்வரர் திருக்கோயில் இணைந்து ராமேஸ்வரம் புனிதத் தீர்த்தம் வழங்கப்பட உள்ளது.
நிகழ்ச்சிக்கு வரும் பக்தர்களுக்கு குடிநீர் வசதி, கழிப்பிட வசதிகள் செய்யப்பட்டுள்ளன. மேலும் கலை நிகழ்ச்சிக்கு வரும் பக்தர்கள் தங்களின் வாகனங்களை நான்கு மாட வீதிகளில் அனுமதிக்கப்பட்ட இடங்களில் நிறுத்திக்கொள்ள வேண்டும்.