தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

'ஆசிரியர்கள் நலன் மீது அக்கறையில் இருந்த மு.க.ஸ்டாலின் மாறிவிட்டார்' - மாயவன் - chennai district news

ஆசிரியர்கள் நலன் மீது அக்கறையில் இருந்த மு.க.ஸ்டாலின் மாறிவிட்டார் என தமிழ்நாடு உயர்நிலை மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழகத்தின் நிறுவனர் மாயவன் குற்றஞ்சாட்டி உள்ளார்.

கருப்பு பேட்ஜ் அணிந்து விடைத்தாள் திருத்தும் பணி
கருப்பு பேட்ஜ் அணிந்து விடைத்தாள் திருத்தும் பணி

By

Published : Jun 6, 2022, 12:28 PM IST

சென்னை: தமிழ்நாட்டில் 10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான விடைத்தாள் திருத்தும் மையங்களில் தமிழ்நாடு முதலமைச்சரின் கவனத்தை ஈர்க்கும் பொருட்டு கருப்பு பேட்ஜ் அணிந்து விடைத்தாள் திருத்தும் பணியில் தமிழ்நாடு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழகத்தினர் ஈடுப்பட்டு வருகின்றனர். சென்னை தி.நகரில் ராமகிருஷ்ணா மிஷின் சாரதா வித்யாலாயா பள்ளியில் நடைபெற்று வரும் விடைத்தாள் திருத்தும் மையத்தில் கருப்பு பேட்ஜ் அணிந்துக் கொண்டு காலையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய தமிழ்நாடு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழகத்தின் நிறுவனர் மாயவன், "தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முதலமைச்சராக வருவதற்கு உண்மையிலேயே ஆசிரியர் சமுதாயம் சட்டத்திட்டங்களுக்கு உட்பட்டு அரும்பாடுபட்டது என்பது ஊரறிந்த விஷயம். முதலமைச்சர் எதிர்கட்சித் தலைவராக இருந்து போது பல வாக்குறுதிகளை அளித்தார். திமுக ஆட்சிக்கு வந்தால் புதிய பென்ஷன் திட்டத்தை ரத்து செய்து பழைய பென்ஷன் திட்டத்தை நிறைவேற்றி தருவதாக கூறினார்.

கருப்பு பேட்ஜ் அணிந்து விடைத்தாள் திருத்தும் பணி

ஆட்சிக்கட்டிலில் ஏறிய உடன் பழைய பென்ஷன் திட்டத்தை நிறைவேற்றித் தருவேன் என கூறியது எங்கள் காதுகளில் இனித்துக் கொண்டு இருக்கிறது. முதலமைச்சராக பதவி ஏற்று 1 ஆண்டிற்கு மேல் கடந்தப் பின்னரும், பழைய பென்ஷன் திட்டம் குறித்து வாய் திறக்காமல் இருப்பது வேதனை அளிக்கிறது. முதலமைச்சர் சட்டப்பேரவையில் இருக்கும் போதே நிதியமைச்சர் பழைய பென்ஷன் திட்டத்தை கொண்டு வருவது சாத்தியமில்லை என கூறியது வேந்தப்புண்ணில் வேல் பாய்ச்சியது போல் இருக்கிறது. அப்போது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இடை மறித்து பழைய பென்ஷன் திட்டம் நிறைவேற்றப்படும் என கூறாமல் இருந்தது மிகவும் வேதனையாக இருக்கிறது. இந்தத்திட்டத்தை உடனடியாக அமுல்படுத்துவதற்காக ஆர்ப்பாட்டம், கருப்பு பேட்ஜ் அணியும் போராட்டம் நடத்தி வருகிறோம்.

பழைய பென்ஷன் திட்டத்தை அமுல்படுத்துவதில் எந்த சிக்கலும் கிடையாது. 100 ஆண்டாக உள்ள திட்டத்தை அமுல்படுத்துவதில் எந்த சிக்கலும் இல்லை. ஆசிரியர் தகுதித் தேர்வு என்பது தேவையற்றது. ஆசிரியர் படிப்பு படிக்கும் போதே அதற்கான பயிற்சியும் பெற்று வருகின்றனர். ஆனால் அப்போது தேர்வு குறித்து எந்த தகவலும் அளிக்கவில்லை. ஆசிரியர் தகுதித் தேர்வு அறிவிப்பதற்கு முன்னர் பணியில் சேர்ந்தவர்களை நிரந்தரம் செய்ய வேண்டும். மேற்கு வங்காளத்தில் முதலமைச்சர் மம்தா பானர்ஜி ஆசிரியர் தகுதித் தேர்வை ரத்துச் செய்துள்ளது போல், தமிழ்நாட்டிலும் அடியுடன் அகற்ற வேண்டும்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எதிர்கட்சித் தலைவராக இருந்ததை விட முழுமையாக மாறி இருக்கிறார். எதிர்கட்சித் தலைவராக இருக்கும் போது ஒரு நாளைக்கு 32 தடவை மூச்சு விடுவதை போல் ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் சிந்தனையில் இருந்தார். ஆனால் முதலமைச்சராக ஆனப்பின்னர் அவர் கூறிய வாக்குறுதியில், சிறிய அளவிற்கு, குண்டு ஊசி அளவிற்கு கூட முதலமைச்சர் நிறைவேற்றவில்லை. ஆனால் 80 சதவீதம் வாக்குறுதியை நிறைவேற்றி விட்டோம் என கூறி வருகிறார். அது எங்களைப் பொறுத்த மட்டில் தவறு, தவறு, தவறு" எனக் கூறினார்.

இதையும் படிங்க:திமுக அமைச்சரவை ஊழல் பெருச்சாளிகளின் கூடாரம்'- அண்ணாமலை பரபரப்பு பேச்சு

ABOUT THE AUTHOR

...view details