தமிழ்நாடு

tamil nadu

டி.என். சேஷன் மறைவு - தலைவர்கள் இரங்கல்

By

Published : Nov 11, 2019, 1:24 PM IST

Updated : Nov 11, 2019, 1:50 PM IST

சென்னை: முன்னாள் தலைமை தேர்தல் ஆணையர் டி.என். சேஷன் மறைவுக்கு அரசியல் கட்சித் தலைவர்கள் பலர் தங்களது இரங்கலைத் தெரிவித்துள்ளனர்.

சேஷன்

முன்னாள் தலைமை தேர்தல் ஆணையர் டி.என். சேஷன் நேற்றிரவு காலமானதை அடுத்து அரசியல் கட்சித் தலைவர்களும் உயர் அலுவலர்களும் அவருக்கு அஞ்சலி செலுத்திவருகின்றனர். இந்திய தேர்தல் வரலாற்றில் டி.என். சேஷன் முக்கியப் பங்கு வகித்துள்ளார் என்பதையும் தேர்தல் ஆணையத்திற்கு இவ்வளவு அதிகாரமா? என ஒரு பிரதமரே வியக்கும் அளவிற்கு அவரது நடவடிக்கைகள் இருந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது. அவரது மறைவுக்கு அரசியல் தலைவர்கள் தெரிவித்த இரங்கல்கள் பின்வருமாறு:

முதலமைச்சர் பழனிசாமி

சிறந்த நிர்வாகி, கடின உழைப்பாளியான டி.என். சேஷன் அனைவரிடமும் அன்பாகப் பழகும் தன்மை கொண்டவர்.

மு.க. ஸ்டாலின் அஞ்சலி

மு.க. ஸ்டாலின் (எதிர்க்கட்சித் தலைவர்)

சுதந்திரமான, நேர்மையான தேர்தலை நடத்தி ஜனநாயகத்தின் உறுதிமிக்க பாதுகாவலராக திகழ்ந்தவர் சேஷன். டி.என். சேஷனின் இழப்பு ஈடுசெய்ய முடியாதது. தேர்தல் நடைமுறையை முறைப்படுத்தி மறுமலர்ச்சியை உருவாக்கியவர் டி.என். சேஷன். அவர் காட்டிய வழியில் பயணிப்பதே அவருக்கு நாம் செலுத்தும் அஞ்சலி

ஜெயக்குமார் அஞ்சலி

அமைச்சர் ஜெயக்குமார்

மூத்த ஐஏஎஸ் அலுவலர். தேர்தல் சீர்த்திருத்தங்களை அறிமுகப்படுத்தியவர். இந்தியாவில் தேர்தல் சீர்த்திருத்தங்களை ஏற்படுத்திய பெருமை அவரையே சாரும். அவரது இழப்பு ஈடு செய்ய முடியாதது. அவரை இழந்து வாடும் குடும்பத்தாருக்கு ஆழ்ந்த இரங்கல்.

கமல்ஹாசன் (மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர்)

தேர்தல் ஆணையத்தின் சக்திவாய்ந்த பாத்திரத்தை பொதுமனிதனின் விவாதத்துக்கு எடுத்துவந்தவர் டி.என். சேஷன். தைரியம், நம்பிக்கையின் உருவமாக நினைவுகூரப்படுபவர்.

ஜி.கே.வாசன் (தமாகா தலைவர்)

தேர்தல் நடைமுறைகளில் சீர்த்திருத்தம் கொண்டுவந்த பெருமை அவரைச் சாரும். மேலும் வாக்காளர் அடையாள அட்டை வழங்கும் முறையை தொடங்கியதற்கு அடித்தளமாகச் செயல்பட்டார். ஒரு சிறந்த நிர்வாகி, அலுவலர் என்று கூறுவதைவிட எடுத்துக்காட்டான நிர்வாகி என்று கூறலாம். கண்டிப்பான அலுவலர் என்ற பெயர் பெற்றாலும்கூட கோரிக்கைகளை பரிசீலிக்கக் கூடியவர். அதனை அனைத்து தரப்பு மக்களுக்கும் செயல்படுத்தக் கூடிய ஒருவராக செயல்பட்டார். மறைந்த தலைவர் ஜி.கே. மூப்பனார் உடன் அன்புடனும் நட்புடனும் பழகினார். அவரது மறைவு நாட்டுக்குப் பேரிழப்பு. அவரை இழந்துவாடும் குடும்பத்தாருக்கும் உற்றார் உறவினர்களுக்கும் தமிழ் மாநில காங்கிரஸ் சார்பாக ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

கராத்தே தியாகராஜன்

திமுக சின்னம் முடங்காமல் காப்பாற்றியவர் டி.என். சேஷன். அவருக்கு அண்ணா அறிவாலயத்தில் சிலை வைப்பதே நன்றிக்கடனாக இருக்கும்.

இதேபோல், சேஷன் மறைவுக்கு காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி உள்ளிட்டோரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

Last Updated : Nov 11, 2019, 1:50 PM IST

ABOUT THE AUTHOR

...view details