தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

100 கோடி ரூபாய் குவாரி டெண்டர்கள் ரத்து - அரசு தகவல் - சென்னை உயர்நீதிமன்றம்

சென்னை: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 100 கோடி ரூபாய் மதிப்பிலான 18 குவாரி டெண்டர்களை ரத்து செய்து விட்டதாக சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.

quarry
quarry

By

Published : Aug 27, 2020, 2:55 PM IST

காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த கிருஷ்ணகிரி தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் செல்லக்குமார், உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள பொதுநல மனுவில், ”கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கருங்கல், ஜல்லி உள்ளிட்ட 18 குவாரிகளுக்கான டெண்டர் அறிவிப்புகளை மாவட்ட ஆட்சியர் கடந்த மாதம் வெளியிட்டார். அதன்படி, பூர்த்தி செய்யப்பட்ட டெண்டர் விண்ணப்பங்கள் கிடைக்க கடந்த மாதம் 5ஆம் தேதி இறுதி நாளாகும். டெண்டர் ஒப்பந்தங்கள் ஆட்சியர் அலுவலகத்தில் விண்ணப்பதாரர்கள் முன்னிலையில் 6ஆம் தேதி திறக்கப்படும் என்றும், எனவே, அதில் கலந்து கொள்ள நேரடியாக வரவேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

தற்போது ஊரடங்கு காலம் என்பதால் ஒரு மாவட்டத்தை விட்டு மற்றொரு மாவட்டத்திற்கு செல்ல முடியாத நிலை இருப்பதால், தற்போது மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள ஓபன் டெண்டர் நடவடிக்கைகள் சிலருக்கு ஆதாயம் அமையும் வகையில் உள்ளது. 100 கோடி ரூபாய்க்கு மேல் உள்ள இந்த 18 குவாரிகளுக்கான டெண்டர் நடவடிக்கைகளில் ஒரு சில குறிப்பிட்ட நபர்கள் மட்டுமே பங்கேற்று பயனடையும் நிலைமை இருக்கிறது.

இதனால் அரசுக்கு பல கோடி ரூபாய் இழப்பு ஏற்படும். எனவே, ஓபன் டெண்டர் நடவடிக்கைகளை கைவிட வேண்டும் எனக் கோரி, கடந்த மாதம் 27ஆம் தேதி கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியருக்கு கோரிக்கை மனு அளிக்கப்பட்டது. ஆனால், அதன் மீது இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. மத்திய அரசின் அனைத்து டெண்டர் நடவடிக்கைகளும் இ-டெண்டர் (மின்னணு டெண்டர்) முறையில் உள்ளது. எனவே தற்போது கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள ஓபன் டெண்டருக்கு தடை விதித்து, மின்னணு முறையில் டெண்டர் நடத்த மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவிட வேண்டும்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த மனு நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ் மற்றும் ஹேமலதா அமர்வில் இன்று (ஆகஸ்ட் 26) விசாரணைக்கு வந்தபோது ஆஜரான அரசு தரப்பு வழக்கறிஞர், வழக்கு தொடர்பான 100 கோடி ரூபாய் மதிப்பிலான டெண்டர் அறிவிப்பாணையை அரசு ரத்து செய்துள்ளதாகத் தெரிவித்தார். அதைப்பதிவு செய்து கொண்ட நீதிபதிகள் வழக்கை முடித்து வைத்து உத்தரவு பிறப்பித்துள்ளனர்.

இதையும் படிங்க: இ-பாஸ் உண்டா? இல்லையா? - வரும் 29ஆம் தேதி முடிவு தெரியும் என அரசு தகவல்

ABOUT THE AUTHOR

...view details