'சைமன் உடலை குடும்பத்தினர் விரும்பிய இடத்தில் அடக்கம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்' - கே. பாலகிருஷ்ணன் - கரோனாவால் உயிரிழந்த டாக்டர் சைமன்
சென்னை: மறைந்த மருத்துவர் சைமன் உடலை அவரது குடும்பம் விரும்பும் இடத்தில் அடக்கம் செய்ய உரிய நடவடிக்கை எடுக்கக் வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே. பாலகிருஷ்ணன் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக அவர் முதலமைச்சருக்கு எழுதிய கடிதத்தில், "கரோனா தொற்று நோயால் பாதிக்கப்பட்டு, உயிரிழந்த மருத்துவர் சைமன் ஹெர்குலஸ்
அவர்களின் உடல் சிலரின் எதிர்ப்பால் அவரது குடும்பத்தினர் விரும்பிய இடத்தில் அடக்கம் செய்ய முடியவில்லை. இதனால் அவரது மனைவி மற்றும் குடும்பத்தினர் மிகக் கடுமையான மன உளைச்சலுக்கு உள்ளாகியுள்ளனர். வாழ்நாள் முழுவதும் அவர்களுக்கு இந்த மன உளைச்சல் இருந்து கொண்டே இருக்கும்.
மேலும், அவரது மனைவி ஆனந்தி தனது கணவரின் உடலை விரும்பிய இடத்தில் அடக்கம் செய்ய அரசு உரிய உதவிகளைச் செய்ய வேண்டுமென வேண்டுகோள் விடுத்திருக்கிறார். இது நியாயமானது மட்டுமன்றி கரோனா தொற்றால் உயிரிழந்தோரை அடக்கம் செய்வது குறித்து மத்திய அரசு வகுத்துள்ள விதிகளுக்கு உட்பட்டதுமாகும். எனவே அவருடைய கோரிக்கையை ஏற்று அவர் விரும்புகிற இடத்தில் அவரது கணவரின் உடலை
அடக்கம் செய்வதற்கு ஆவன செய்ய வேண்டுமெனக் கேட்டுக் கொள்கிறேன்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.