தமிழ்நாடு

tamil nadu

By

Published : May 4, 2021, 9:47 AM IST

ETV Bharat / city

பாமகவுடன் கூட்டுவைத்தது அதிமுகவுக்கு பாதகமா?

நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக தனிப்பெருபான்மையில் வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றியுள்ள நிலையில், அதிமுக கூட்டணி 75 இடங்களில் தான் வென்றுள்ளது. இதனால் அதிமுகவின் தோல்விக்கு பாமகவும் பாதகமாக இருந்ததா என இந்த செய்தியில் பார்க்கலாம்.

ground analysis for pmk lost, admk alliance lost, admk alliance
பாமகவுடன் கூட்டுவைத்தது அதிமுகவுக்கு பாதகமா

சென்னை: 2021ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் பாஜக, பாமக ஆகிய கட்சிகள் இடம்பெற்றிருந்தன. இதில் பல கட்ட பேச்சுவார்த்தைக்கு பின் அதிமுக, பாமகவுக்கு 23 தொகுதிகளை ஒதுக்கியது. மேலும் பாமகவின் நீண்டக்கால கோரிக்கையான 10.5 விழுக்காடு உள் ஒதுக்கீட்டை வன்னியர்களுக்கு ஒதுக்கி தேர்தல் நெருங்கி வரும் வேளையில் அரசாணையை பிறப்பித்தது.

இந்த யுக்தியை பயன்படுத்தி தேர்தலில் பாமக தமக்கு ஒதுக்கப்பட்டுள்ள சட்டப்பேரவைத் தொகுதிகளில் வெற்றி வகையைச் சூடலாம் என கருதப்பட்ட நிலையில் பாமக வெறும் ஐந்து தொகுதிகளில் மட்டும் வெற்றி பெற்றுள்ளது.

குறைந்த ஸ்டிரைக் ரேட்டில் பாமக

பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் ராமதாஸ்

பாமக தமது வேட்பாளர்களை வன்னியர்கள் அதிகமாக வசிக்கும் வட மாவட்டங்களான விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், தருமபுரி, திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களில் நிறுத்தியது. கவுண்டர்களும், வன்னியர்களும் அதிகமுள்ள தொகுதிகளான சேலம் (மேற்கு), மேட்டூரில் பாமக வேட்பாளர்களை களமிறக்கியது. இதுபோக, வன்னியர்கள் அதிகம் இல்லாத தொகுதியான ஆத்தூர் (திண்டுக்கல்) தொகுதியிலும் வேட்பாளரை நிறுத்தியது

எனினும், பாமகவின் இந்த யுக்தி தேர்தலில் எடுபடவில்லை. 23 தொகுதிகளில் தேர்தலை சந்தித்த பாமக, சேலம் மாவட்டம் மேட்டூர், சேலம் மேற்கு, தருமபுரி, பென்னாகரம், விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள மயிலம் என மொத்தம் ஐந்து இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது. பாமகவுக்கு அதிக தொகுதிகள் ஒதுக்கியும் சொற்ப இடங்களிலே வென்றதால் அதிமுக நிர்வாகிகள் கடும் அதிருப்தியில் உள்ளனர் என அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது.

இடஒதுக்கீட்டிற்கு பலன் கிடைத்ததா?

அரசியல் ஆய்வாளர் பி.ராமஜெயம் கூறுகையில், "அதிமுக அரசு, வன்னியர்களுக்கான 10.5 விழுக்காடு உள்ஒதுக்கீடு சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்கும்போது அரசாணை பிறப்பித்ததால் பெரும்பாலான வன்னியர்களுக்கு இந்த செய்தி சென்றடைய வாய்ப்பில்லை. இந்த கோரிக்கையை நிறைவேற்ற பாமக மட்டும்தான் குரல் கொடுத்து வந்தது. மற்ற கட்சிகள், அமைப்புகள் ஆகியவை இந்த கோரிக்கையைக் கண்டுகொள்ளவில்லை.

மோடியுடன் ராமதாஸ்

தமிழ்நாடு மக்கள் மத்தியில் செல்வாக்கு இல்லாத பாஜக 4 இடங்களை கைப்பற்றியுள்ள நிலையில், கடந்த 30 வருடங்களாக மாநிலத்தில் அங்கம் வகிக்கும் பாமக வெறும் ஐந்து இடங்களில் மட்டும் பெற்றுள்ளது என்பது பாமகவுக்கு மட்டுமல்ல, கூட்டணி வைத்திருக்கும் அதிமுகவுக்கும் ஒரு பாதகம்தான்" என அவர் தெரிவித்தார்.

இது குறித்து அதிமுகவின் செய்தி தொடர்பாளர் சிவசங்கரி நம்மிடம் தொலைபேசி வாயிலாக கூறுகையில்,"முந்தைய அதிமுக அரசு பாமகவுக்கு 10.5 உள்ஒதுக்கீட்டிற்கான அரசாணையை பிறப்பித்தது. இதனால் வட மாவட்டங்களில் வன்னியர்கள் அல்லாத பிற சமூகத்தினர் அதிருப்தி அடைந்து வாக்குகள் மாறியிருக்கலாம்.

மேலும், கிராமப்புறங்களில் உள்ள இளைஞர்கள் நாம் தமிழர் கட்சி, மக்கள் நீதி மய்யம் போன்ற கட்சிகளுக்கு தங்களது வாக்குகளை செலுத்தியிருக்கலாம்" என்றும், அதிமுகவின் தோல்விக்கு கூட்டணி கட்சிகள் காரணமா என்பதை பரிசீலனை செய்வோம் என்றும் கூறினார்.

இதையும் படிங்க: நயினார் நாகேந்திரனால் மலர்ந்த தாமரை!

ABOUT THE AUTHOR

...view details