சென்னை:முதலீட்டை ஈர்ப்பதில், அகில இந்திய அளவில் தமிழ்நாடு ஒரு முன்னணி மாநிலமாக திகழ்கிறது. கடந்த 10 ஆண்டுகளில் மேற்கொள்ளப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தங்களின் செயல்பாட்டு விகிதம் 82.4 விழுக்காடாகும் என்று தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.
இது குறித்து அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், கடந்த 10 ஆண்டுகளில் தமிழ்நாட்டில் மேற்கொள்ளப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் 9.4 விழுக்காடு மட்டுமே செயல்பாட்டுக்கு வந்துள்ளன என்று பத்திரிக்கை ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. இது முற்றிலும் உண்மைக்கு புறம்பான செய்தியாகும்.
கடந்த 10 ஆண்டுகளில் மேற்கொள்ளப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தங்களின் செயல்பாட்டு விகிதம் 82.4 விழுக்காடாகும். கடந்த 10 ஆண்டுகளில் 26,309 புதிய தொழில் திட்டங்கள் தமது புதிய உற்பத்தியை துவங்குவதற்கான "இயங்குவதற்கான இசைவு ஆணையை (CTO) தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்திடம் பெற்றுள்ளன.
கடந்த 3 நிதியாண்டுகளில் மட்டும் தமிழ்நாடு மின்சார வாரியத்தால் 1,164 புதிய உயர் அழுத்த மின் இணைப்புகள் அளிக்கப்பட்டுள்ளன. கடந்த 5 ஆண்டுகளில் தமிழ்நாட்டின் உற்பத்தி துறையின் மொத்த மதிப்பு கூட்டல் ஆண்டுக்கு சராசரியாக 12.7 விழுக்காடு என்ற அளவில் வளர்ச்சி பெற்று வருகிறது.
இவை அனைத்திற்கும் மேலாக தேசிய சராசரியைக் காட்டிலும் அதிக வளர்ச்சியை தொடர்ந்து பெற்று, இந்தியாவில் தொழில் துறையின் முன்னணி மாநிலமாக தமிழ்நாடு திகழ்ந்து வருகிறது.
பத்திரிக்கை செய்திக்கு மறுப்பு
நாளிதழ் ஒன்றில் வந்த அந்தச் செய்தி மத்திய அரசின் தொழில் மற்றும் உள்நாட்டு வர்த்தக மேம்பாட்டு துறை இணையதளத்திலுள்ள தொழில் முனைவோர் கருத்துருக்களின் அடிப்படையில் வெளியிடப்பட்டுள்ளது.
இந்த தொழில் முனைவோர் கருத்துரு இணையதளத்தில் முதலீட்டாளர்கள் தங்களுடைய முதலீட்டு நோக்கத்தினை முதலில் பதிவேற்றி விட்டு, பின்னர், திட்டம் செயல்பாட்டுக்கு வந்ததும் திட்டத்தின் நிலையை பதிவு செய்யலாம். இந்த இணையதளத்தில் அனைத்து முதலீட்டாளர்களும் பதிவு செய்வதை உறுதி செய்ய எவ்வித கட்டாயமைப்பும் இல்லை. இந்த தரவுகள் ஒரு மாநிலத்தின் உண்மையான முதலீட்டு சூழலை பிரதிபலிக்காது என தெரிவித்துள்ளது.