ஊரடங்கு உத்தரவு கரணமாக எழுந்துள்ள நடைமுறை சிக்கல்களை தவிர்க்க தமிழ்நாடு அரசுக்கு கரோனா விழிப்புணர்வு மற்றும் கண்காணிப்புக் குழு சில கோரிக்கைகளை வைத்துள்ளது
இது தொடர்பாக அந்த அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், ”கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையின் ஒரு அங்கமான ஊரடங்கு உத்தரவு காரணமாக பொதுமக்கள் அனைவரும் வீடுகளில் முடங்கிக் கிடக்கின்றனர்.
வேலையின்மையால் மக்களின் வாழ்வாதாரம் பெரும் சிக்கலை சந்தித்துள்ளது. பொருளாதாரமின்மையால் பெரும் இன்னல்களுக்கு மத்தியில்தான் அவர்கள் இந்த ஊரடங்கு உத்தரவுக்கு ஒத்துழைப்பு வழங்கி வருகின்றனர். அரசு அளிக்கும் 1000 ரூபாய் உதவித்தொகை என்பது யானைப் பசிக்கு சோளப்பொரி போன்றதாக உள்ளது. மறுபுறம் அத்தியாவசிய பொருட்களின் விலையேற்றமானது பொதுமக்களை மென்மேலும் துயருக்குள் தள்ளுகிறது.
பெரும்பாலான அத்தியாவசிய பொருட்களின் விலையானது 30% முதல் 50%வரை உயர்ந்துள்ளது. பொருட்களின் தட்டுப்பாடு காரணமாக இந்த விலையேற்றம் நிகழ்ந்தாலும், மறுபுறம் பதுக்கல்காரர்களின் கொள்ளை லாப நோக்கமும் இத்தகைய விலையேற்றத்துக்கு முக்கிய காரணமாகும். ஆகவே, தமிழ்நாடு அரசு இத்தகைய விலையேற்றத்தை கட்டுப்படுத்த போர்க்கால நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். உடனடியாக மாவட்ட வாரியாக கண்காணிப்புக் குழுவை நியமித்து விலைவாசி ஏற்றத்தை தடுத்து நிறுத்த வேண்டும்.
காய்கறிகளை விவசாயிகளிடமிருந்து அடிமாட்டு விலைக்கு வாங்கி சந்தைகளில் அதிக அளவுக்கு இடைத்தரகர்களால் விற்பனை செய்யப்படுகின்றன. ஒரு கிலோ மிளகாய் 10 ரூபாய்க்கும் குறைவாக விவசாயிகளுடமிருந்து கொள்முதல் செய்யப்பட்டு அது கடைகளில் கிலோ 80 ரூபாய் முதல் 100 ரூபாய் வரை விற்கப்படுகின்றது. இதுபோன்று பலவகையான காய்கறிகளும் விற்பனை செய்யப்படுகின்றன.
இதனால் விவசாயிகள் போதிய விலை கிடைக்காமல் பாதிக்கப்படுவதோடு, வருமானமின்றி முடக்கப்பட்டிருக்கும் கோடிக்கணக்கான மக்களும் துயரங்களுக்கு ஆளாகின்றனர். இதனை தமிழ்நாடு அரசு உடனடியாக கவனத்தில்கொண்டு செயல்பட வேண்டும். ஊரடங்கானது மேலும் நீட்டிக்கப்படும்பட்சத்தில் அரசு குறைந்தது கூடுதலாக 5 ஆயிரம் ரூபாய் உதவித் தொகையை ஒவ்வொரு குடும்பத்திற்கும் உடனடியாக வழங்கினால் மட்டுமே, மக்கள் பசியின்றி வாழ முடியும்.
இல்லாவிட்டால் கரோனாவுக்கு எதிரான போரில் மக்கள் பசி, பட்டினியில் சிக்கும் அபாயகரமான சூழல் ஏற்பட்டுவிடும் என்பதையும் மத்திய, மாநில அரசுகள் கவனத்தில் கொள்ள வேண்டும்” என குறிப்பிடப்பட்டுள்ளது.