தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

'இரங்கலுக்கு இந்தியில் கடிதம் எழுதியிருந்த அமித் ஷாவின் செயல் ஆணவத்தின் உச்சகட்டம்' - வைகோ - உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் ஆணவப் போக்கு - வைகோ கடும் கண்டனம்

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் தாயார் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து, உள்துறை அமைச்சர் அமித் ஷா, இந்தியில் கடிதம் எழுதி இருப்பதற்கு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கடும் கண்டனத்தைத் தெரிவித்துள்ளார்.

உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் ஆணவப் போக்கு - வைகோ கடும் கண்டனம்
உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் ஆணவப் போக்கு - வைகோ கடும் கண்டனம்

By

Published : Oct 14, 2020, 9:57 PM IST

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் தாயார் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து, உள்துறை அமைச்சர் அமித் ஷா, இந்தியில் கடிதம் எழுதி இருந்தார். இதற்கு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கடும் கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.

இதுகுறித்து வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில், 'இது, வெந்த புண்ணில் வேல் பாய்ச்சும் கொடுமை; இந்தி வெறி ஆணவத்தின் உச்சகட்டம். இதனை சகித்துக் கொள்ள முடியாது. மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் இச்செயலுக்கு வன்மையான கண்டனத்தை தெரிவித்துக் கொள்கின்றேன்.

அண்மைக்காலமாக தமிழ்நாட்டு நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு, மத்திய அமைச்சர்கள் இந்தியில்தான் கடிதங்கள் எழுதி வருகின்றார்கள். தங்களுடைய ஃபேஸ்புக், ட்விட்டர் போன்ற வலைதளப் பக்கங்களிலும், இந்தியில் மட்டுமே எழுதி வருகின்றார்கள். இந்தப் போக்கு தமிழுக்கு மட்டும் அல்ல, அனைத்து இந்திய மொழிகளுக்கும் எதிரானது. எங்கள் ஆட்சி, இந்திக்காரர்களுக்கு மட்டும்தான் என்பதை இந்நிகழ்வுகள் சுட்டிக் காட்டுகின்றது.

எவ்வளவுதான் எடுத்துச் சொன்னாலும் நாங்கள் ஏற்றுக்கொள்ள மாட்டோம்; தமிழர்களின் உணர்வுகளை மதிக்க மாட்டோம்; நாங்கள் சொல்வதைத்தான் தமிழர்கள் கேட்க வேண்டும்; நாங்கள் எழுதுவதைத்தான் தமிழர்கள் படிக்க வேண்டும் என்கின்ற இந்தி ஆதிக்க வெறி மனப்பான்மை, இந்தியாவைக் கூறுபோட்டுவிடும் என்பதை, பாஜக ஆட்சியாளர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

எனக்கு இந்தி தெரியாது; எனவே, உங்கள் கடிதத்தை ஆங்கிலத்தில் எழுதி அனுப்புங்கள் என்று கூறி, அந்தக் கடிதத்தை, எடப்பாடி பழனிசாமி, அமித் ஷாவுக்குத் திருப்பி அனுப்ப வேண்டும் என்று கேட்டுக் கொள்கின்றேன்.

இல்லையேல், இனி அவர் அனைத்துக் கடிதங்களையும் இந்தியில்தான் எழுதி அனுப்புவார். அதைத் தடுத்து நிறுத்த வேண்டியது, முதலமைச்சரின் கடமை' எனத் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: ’அதிமுகவிற்கு மரண அடி கிடைக்கும்’ - மதிமுக பொதுச்செயலாளர் வைகோ

ABOUT THE AUTHOR

...view details