தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

கரோனாவால் உயிரிழந்த ஜெ. அன்பழகனுடன் தொடர்பில் இருந்தவர்கள் யார் யார்? - ஜெ.அன்பழகன்

சென்னை: கரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த திமுக சட்டப்பேரவை உறுப்பினர் ஜெ. அன்பழகனுடன் தொடர்பில் இருந்த, அவரது குடும்பத்தினர் மற்றும் திமுக நிர்வாகிகளுக்கும் கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், அவருடன் யார் யார் தொடர்பில் இருந்தார்கள் என்பது குறித்தும் சுகாதாரத் துறை அலுவலர்கள் ஆராய்ந்துவருகின்றனர்.

mla
mla

By

Published : Jun 10, 2020, 6:09 PM IST

ரேலா மருத்துவமனையில் அனுமதிப்பதற்கு முந்தைய நாள் வரை, ஊரடங்கால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட ஏழை மக்களுக்கு, உதவிப் பணிகளைச் செய்துவந்தார் மறைந்த திமுக எம்எல்ஏ ஜெ. அன்பழகன். ஆனால், வாழ்வாதாரம் பாதித்தவர்களைக் கை தூக்கிவிடும் களத்திலேயே அவரின் வாழ்வு பறிபோயிருக்கிறது.

ஏற்கனவே நீரிழிவு, நுரையீரல் மற்றும் இருதயக் கோளாறுகளால் பாதிக்கப்பட்டிருந்த ஜெ. அன்பழகன், சில ஆண்டுகளுக்கு முன்புதான் கல்லீரல் மாற்று அறுவைச் சிகிச்சையும் செய்துகொண்டார். தன்னுடைய உடல்நலத்தையும் பொருட்படுத்தாமல் கட்சிக் கூட்டங்கள், சட்டப்பேரவை நிகழ்வுகள், போராட்டங்கள், கட்சியினர் இல்ல நிகழ்வுகளில் பங்கேற்பு என்று பம்பரமாகச் சுற்றிக்கொண்டிருந்தவரை, கரோனாவும் சோதித்து பார்த்தது.

கரோனா நலத்திட்டப் பணிகளில் ஜெ. அன்பழகன்

ஊரடங்கால் தொழில், வருவாய் இல்லாமல் மாநிலம் முழுவதும் பெரும்பாலான மக்கள் பொருளாதார இழப்பில் சிக்கிக்கொண்டிருந்தபோதுதான், ’ஒன்றிணைவோம் வா’ என்ற மக்களுக்கு உதவும் வகையிலான திட்டத்தை திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் அறிவித்தார். அதன்படி, ஜெ. அன்பழகன் சட்டப்பேரவை உறுப்பினராக உள்ள திருவல்லிக்கேணி-சேப்பாக்கம் தொகுதிக்கு உள்பட்ட பகுதிகளிலும், தனது வீடு அமைந்துள்ள தியாகராய நகர் பகுதிகளிலும் தொடர்ந்து உதவிப்பணிகளில் ஈடுபட்டு வந்தார்.

அதுமட்டுமல்லாமல், கடந்த மாதம் தமிழ்நாடு அரசு டாஸ்மாக் கடைகளைத் திறக்க முடிவு செய்ததைக் கண்டித்து, அண்ணா அறிவாலயத்தில் அன்பழகன் தலைமையில்தான் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதன் பின்னரும் பல நிவாரணப் பணிகளில் ஈடுபட்டு வந்த ஜெ. அன்பழகன், மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவதற்கு ஐந்து நாள்கள் முன்னதாக அதாவது, கடந்த மே மாதம் 27ஆம் தேதி, சென்னை மேற்கு மாவட்ட திமுக சார்பில் நடந்த நிகழ்வில் பங்கேற்று நிவாரணப் பொருள்களை வழங்கினார். அவருடன் ஏராளமான திருவல்லிக்கேணி-சேப்பாக்கம் தொகுதியைச் சேர்ந்த கட்சி நிர்வாகிகளும் கலந்து கொண்டிருந்தனர்.

மூன்று முறை சட்டப்பேரவை உறுப்பினரான ஜெ. அன்பழகன்

இந்நிகழ்வுக்குப் பின்னர்தான் அன்பழகனுக்கு லேசான உடல் சோர்வு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. இறுதியாக மே 29ஆம் தேதி மறைந்த திமுக தலைவர் கலைஞர் கருணாநிதி பிறந்தநாளை முன்னிட்டு, ஜெ. அன்பழகன் தலைமையில் சென்னை மேற்கு மாவட்ட திமுக நிர்வாகிகள் கூட்டம் காணொலி மூலம் நடைபெற்றது. லேசான காய்ச்சலுடன் அதில் கலந்துகொண்ட அன்பழகன், காய்ச்சலுக்கு மருந்து எடுத்துக்கொண்டு அன்றிலிருந்து வீட்டை விட்டு வெளியே வருவதைத் தவிர்த்தார்.

திமுக தலைவர் மு.க. ஸ்டாலினோடு ஜெ. அன்பழகன்

இச்சூழலில், ஜூன் 2ஆம் தேதி அவருக்குத் திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டது. உடனே, குரோம்பேட்டையிலுள்ள ரேலா தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு நடத்தப்பட்ட சோதனையில் கரோனா உறுதி செய்யப்பட்டது. இதனால், அவருடைய குடும்பத்தினர் மட்டுமன்றி, உடனிருந்த கட்சி நிர்வாகிகளும் கடும் அதிர்ச்சியடைந்தனர். செயற்கையாக ஆக்சிஜன் செலுத்தப்பட்டு தீவிரச் சிகிச்சைப் பிரிவில் இருந்த அன்பழகன், தொடர் சிகிச்சை பலனளிக்காமல் இன்று காலை, இந்தியாவில் கரோனாவால் உயிரிழந்த முதல் சட்டப்பேரவை உறுப்பினராகக் காலமானார்.

ஜெ. அன்பழகன்

அன்பழகன் உயிரிழந்ததையடுத்து, அவருக்கு எவ்வாறு தொற்று பரவியது என்பது குறித்து இன்னும் தெளிவாகத் தெரியவில்லை. பல இடங்களில் நலத்திட்ட உதவிகள் வழங்கிவந்ததன் மூலம் அவருக்கு தொற்று ஏற்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது. மேலும், அவருடன் தொடர்பிலிருந்த அவரது மனைவி, மகன், மருமகள் உள்ளிட்டோருக்கும் கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. ஆனால், நல்வாய்ப்பாக அவர்களுக்கு உடல்நிலை சீராக உள்ளதாக அன்பழகன் குடும்பத்திற்கு நெருக்கமானவர்கள் தெரிவிக்கின்றனர்.

அதோடு மட்டுமின்றி அன்பழகனோடு சேர்ந்து கட்சிப் பணியிலிருந்த, திமுக மேற்கு மாவட்டப் பொருளாளர் கென்னடி, சேப்பாக்கம் பகுதிச் செயலாளர் காமராஜ் உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் 25க்கும் மேற்பட்டோருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. அனைவரின் உடல் நிலையும் சீராக உள்ளதாகவும் கூறப்படுகிறது. மேலும், அன்பழகனோடு வேறு யார் யாரெல்லாம் தொடர்பில் இருந்தார்கள், அவரை நேரில் சந்தித்தவர்களின் விவரம் போன்றவை குறித்து சுகாதாரத் துறை அலுவலர்கள் தீவிரமாக ஆராய்ந்து வருவதாகக் கூறப்படுகிறது.

ஜெ. அன்பழகன்

கட்சிக்காகவும், தலைமைக்காகவும் உயிரையும் கொடுக்கத் தயார் என்று முழங்கிய அன்பழகனின் பரபரப்பான வாழ்வும், அதே பரபரப்புடனே முடிந்திருக்கிறது.

இதையும் படிங்க: 5 மாதத்தில் 3 எம்எல்ஏக்கள் மரணம்; அன்றே கவலைப்பட்ட துரைமுருகன்; திமுகவுக்கு தொடரும் சோகம்!

ABOUT THE AUTHOR

...view details