சென்னை: பெண் ஐபிஎஸ் அலுவலருக்கு பாலியல் தொல்லை அளித்ததாக சிறப்பு காவல்துறை டிஜிபி ஒருவர் கடந்த மார்ச் 19ஆம் தேதி சஸ்பெண்ட் செய்யப்பட்டார். இதில், அவருக்கு எதிராக சென்னை உயர் நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்த வழக்கு, இன்று (ஜூன் 18) நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன் விசாரணைக்கு வந்தது.
தாமதாமாகும் தடயவியல் அறிக்கை
அப்போது, காவல்துறை தரப்பில் ஆஜரான தலைமை குற்றவியல் வழக்கறிஞர் ஹசன் முகமது ஜின்னா, கடந்த ஏப்ரல் மாதத்துக்கு பின், இரண்டு அலுவலர்களிடம் மறு விசாரணை நடத்தப்பட்டதாகவும், அதன் அடிப்படையில், ஐந்து அலுவலர்களிடமும், இரண்டு பிற சாட்சிகளிடமும் விசாரணை நடத்தப்பட்டு, வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
மேலும், மொத்தம் 113 சாட்சிகளிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளதாகவும், ஊரடங்கு காரணமாக தடயவியல் அறிக்கையை பெற முடியவில்லை எனவும் கூறினார்.
ஆறுவார அவகாசம்
தடயவியல் அறிக்கை மூன்று வாரங்களில் கிடைத்துவிடும் என்பதால், புலன்விசாரணையை முடித்து இறுதி அறிக்கை தாக்கல் செய்ய ஆறு வாரம் அவகாசம் வழங்க வேண்டும் என நீதிமன்றத்தில் காணொலி காட்சி மூலம் ஆஜராகியிருந்த புலன் விசாரணை அலுவலர் கேட்டுக் கொண்டார்.
ஜூலை 30ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு
அரசுத்தரப்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர் சண்முகசுந்தரம், பாலியல் தொல்லை புகாரை விசாரிக்க அமைக்கப்பட்ட விசாகா குழு, தனது அறிக்கையை ஏற்கனவே உள்துறை செயலாளரிடம் சமர்ப்பித்துவிட்டதாகவும், அதன் அடிப்படையில் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் குறிப்பிட்டார்.
இதையடுத்து, இடைநீக்கம் செய்யப்பட்ட சிறப்பு காவல்துறை டிஜிபிக்கு எதிரான வழக்கின் புலன் விசாரணையை முடித்து, 6 வாரங்களில் சம்பந்தப்பட்ட நீதிமன்றத்தில் இறுதி அறிக்கையை தாக்கல் செய்ய உத்தரவிட்ட நீதிபதி, விசாரணையை ஜூலை 30ம் தேதிக்கு தள்ளிவைத்தார்.
இதையும் படிங்க: 'டாஸ்மாக் திறப்பு ஏன்?' - முதலமைச்சர் விளக்கம்