தமிழ்நாட்டில் ஆணவக் கொலைகளைத் தடுக்கும்வகையில் அனைத்து மாவட்டங்களிலும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர், மாவட்ட சமூக நலத் துறை அலுவலர், மாவட்ட ஆதி திராவிடர் நல அலுவலர் அடங்கிய சிறப்புப் பிரிவைத் தொடங்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் ஏற்கனவே உத்தரவு பிறப்பித்துள்ளது.
இந்த உத்தரவை அமல்படுத்தும் வகையில் அனைத்து மாவட்டங்களிலும் தனிப்பிரிவைத் தொடங்க உத்தரவிடக் கோரி துளிர் அறக்கட்டளை சார்பில் அதன் நிர்வாக அறங்காவலர் வித்யாரெட்டி, சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல மனுவைத் தாக்கல்செய்துள்ளார். அந்த மனுவில், "உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை அமல்படுத்தியிருந்தால் தமிழ்நாடு ஆணவக் கொலைகள் இல்லா மாநிலமாக மாறியிருக்கும்.
கடந்த ஆண்டு புதுக்கோட்டையைச் சேர்ந்த காதல் திருமணம் செய்துகொண்ட தம்பதி, கோவை செல்லும் வழியில் காவல் துறையினரால் தடுத்து நிறுத்தப்பட்டு, பெண்ணின் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டார். அதன்பின் அப்பெண் சந்தேகத்திற்கிடமான முறையில் மரணமடைந்தார். இது ஆணவக் கொலையாக இருக்கலாம்" எனச் சந்தேகம் எழுப்பியுள்ளார். அதனால் உயர் நீதிமன்ற உத்தரவை அமல்படுத்த உத்தரவிட வேண்டும் எனவும் மனுவில் கோரிக்கைவிடுத்துள்ளார்.