சென்னை:சட்டப்பேரவையின் நேற்று (மே 06) நேரமில்லா நேரத்தில் பேசிய ஜி.கே.மணி எம்எல்ஏ பேசுகையில், "தருமபுரி மாவட்டம் விவசாயத்தை நம்பியுள்ள வறட்சியான மாவட்டம். தமிழ்நாட்டின் சராசரி மழை அளவு 987 மி.மீ ஆக இருந்தாலும் தருமபுரி மாவட்டத்தின் ஆண்டு சராசரி மழை அளவு 853 மி.மீ ஆகும்.
மழையளவு குறைந்த மாவட்டம், பெரிய பாசன திட்டம் இல்லாத மாவட்டம் தருமபுரி மாவட்டம். இவ்வாறு பின்தங்கிய மாவட்டமாக இருந்தாலும் 555 ஏரிகள், குளங்கள், குட்டைகள் போன்ற நீர்நிலைகளை உள்ளடக்கிய மாவட்டமாகும். மழை பெய்யாத காலங்களில் நிரம்பாத நீர் நிலைகள் அதிகமுள்ள மாவட்டம். பாசன திட்டங்கள் ஏதுமில்லாத காரணத்தினால் கம்பு, சோளம், சாமை, உளுந்து போன்ற பயிர்களை நம்பியுள்ள விவசாயிகள் பெரிய அளவில் பாதிக்கப்படுகின்றனர்.
தருமபுரி மாவட்டத்தில் மட்டும் 2,10,300 விவசாய குடும்பங்கள் விவசாயத்தை மட்டுமே நம்பி உள்ளனர். ஆனால் நீர்ப்பாசன திட்டங்கள் இல்லாததால் 1,90,000 குடும்பங்கள் கர்நாடகா, ஓசூர் போன்ற வெளி மாவட்டங்களுக்கு கல்லுடைக்க சென்றும், பெண்கள் ஈரோடு, திருச்சி போன்ற வெளி மாவட்டங்களுக்கு நெல் அறுவடை வேலைக்கு செல்லும் அவல சூழ்நிலையே நிலவுகிறது.