தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

கிரிஜா வைத்தியநாதன் வழக்கு ஏப். 19-க்கு ஒத்திவைப்பு

கிரிஜா வைத்தியநாதன் வழக்கு ஏப். 19-க்கு ஒத்திவைப்பு
கிரிஜா வைத்தியநாதன் வழக்கு ஏப். 19-க்கு ஒத்திவைப்பு

By

Published : Apr 16, 2021, 11:50 AM IST

Updated : Apr 16, 2021, 2:23 PM IST

11:41 April 16

சென்னை: தென்மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் நிபுணர் குழு உறுப்பினராக கிரிஜா வைத்தியநாதன் நியமிக்கப்பட்டதற்கு எதிரான வழக்கு ஏப். 19ஆம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டது.

பசுமைத் தீர்ப்பாய நிபுணத்துவ உறுப்பினர்களாக நியமிக்கப்படுபவர்கள், அதில் நிபுணர்களாக இருக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.

தேசிய பசுமைத் தீர்ப்பாய நிபுணத்துவ உறுப்பினராக முன்னாள் தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் நியமிக்கப்பட்டதை எதிர்த்து பூவுலகின் நண்பர்கள் அமைப்பின் சார்பில் சுந்தர்ராஜன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

விதிகளின்படி, ஐந்து ஆண்டுகள் சுற்றுச்சூழல் சார்ந்த பணிகளில் அனுபவம் பெற்றிருக்க வேண்டும் என்ற நிலையில், 3 ஆண்டுகள் 6 மாதங்கள் மட்டுமே அனுபவம் கொண்ட கிரிஜா வைத்தியநாதன் நியமிக்கப்பட்டுள்ளதாக மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி அமர்வு, கிரிஜா வைத்தியநாதன் நியமனத்துக்கு இடைக்கால தடை விதித்திருந்தது.

இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சிவ் பானர்ஜி மற்றும் செந்தில்குமார் ராமமூர்த்தி அடங்கிய அமர்வில் மீண்டும் விசாரணைக்கு வந்த போது, வரி, சுற்றுச்சூழல், நுகர்வோர் விவகாரங்களில் உயர் நீதிமன்ற நீதிபதிகளுக்கு போதிய நிபுணத்துவம் இல்லை என்பதாலேயே மத்திய அரசு தீர்ப்பாயங்களை உருவாக்கியது எனக் குறிப்பிட்ட தலைமை நீதிபதி, நிபுணராக இல்லாத ஐஏஎஸ் அதிகாரிகள் தற்போது நியமிக்கப்பட்டு வருகின்றனர் எனவும், நிபுணத்துவ உறுப்பினர் என்பவர் நிபுணராக இருக்க வேண்டும் என தெரிவித்தார்.

மத்திய அரசு தரப்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல், விதிகளின்படி, சுற்றுச்சூழல் படிப்பில் முதுகலை அல்லது முனைவர் பட்டம் பெற்று, 25 ஆண்டுகள் இத்துறையில் அனுபவம் பெற்றிருக்க வேண்டும் அல்லது 20 ஆண்டுகால நிர்வாக அனுபவத்தில் ஐந்து ஆண்டுகள் சுற்றுச்சூழல் சார்ந்த துறையில் பணியற்றிய அனுபவம் பெற்றிருக்க வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது என்றார்.

தொடர்ந்து அவர், பெரும்பாலான அரசு நிறுவனங்களின் நிர்வாக கட்டுப்பாட்டை கவனிப்பது ஐஏஎஸ் அதிகாரிகள்தான் எனவும் குறிப்பிட்டார். பின் வழக்கு தொடர்பான ஆவணங்களை தாக்கல் செய்யக் கூறி, வழக்கு விசாரணையை ஏப்ரல் 19ம் தேதிக்கு நீதிபதிகள் தள்ளிவைத்தனர்.

Last Updated : Apr 16, 2021, 2:23 PM IST

ABOUT THE AUTHOR

...view details