தமிழ்நாடு

tamil nadu

நிவாரணம் கேட்டு போராட்டம் நடத்தியவர்கள் மீதுள்ள வழக்குகள் ரத்து!

By

Published : Jul 23, 2019, 1:21 PM IST

Updated : Jul 23, 2019, 3:07 PM IST

சென்னை: கஜா புயலின்போது நிவாரணம் கேட்டு சாலைமறியல் போராட்டம் நடத்திய, 140 பேர் மீது போடப்பட்ட வழக்கை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

உயர்நீதிமன்றம்

2017ஆம் ஆண்டு, நவம்பர் மாதம் நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர் உள்ளிட்ட மாவட்டங்களில் கஜா புயல் கடுமையாகத் தாக்கியது. இதில் பலர் வீடுகளையும், விவசாய நிலங்களையும் இழந்தனர். இந்நிலையில் நாகை மாவட்டம் வேதாரண்யம் தலைஞாயிறு பகுதியைச் சேர்ந்த நூறுக்கும் மேற்பட்டவர்கள், நிவாரணம் கேட்டுப் போராடினர். அப்போது அவர்கள் மீது காவல் துறை தடியடி நடத்தி, 140-க்கும் மேற்பட்டோர் மீது வழக்குப்பதிவு செய்திருந்தது.

இந்த வழக்கு விசாரணை தொடர்பாக வேதாரண்யம் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்யப்பட்டது. ஆனால் இவ்வழக்கு விசாரணைக்குத் தடைவிதிக்கக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் பாதிக்கப்பட்டவர்கள் வழக்கு தொடர்ந்தனர். நியாயமான முறையில் நிவாரணம் கேட்டதற்காக, தங்கள் மீது பொய் வழக்குப் போடப்பட்டுள்ளது, எனவே வழக்கை விசாரிக்கத் தடை விதிக்க வேண்டும் என்று அவர்கள் தரப்பில் வாதிடப்பட்டது.

வழக்கை விசாரித்த உயர் நீதிமன்ற நீதிபதி, நிவாரணம் கேட்டு சாலை மறியல் போராட்டம் நடத்திய 140 பேர் மீது தொடரப்பட்ட வழக்கு விசாரணைக்கு இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டிருந்தார்.

இதனைத் தொடர்ந்து, இந்த வழக்கின் இறுதி விசாரணை நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்பு நடைபெற்றது. அப்போது மனுதாரர் சார்பில் பேரிடர் மேலாண்மை சட்டத்தின் கீழ் நிவாரணம் வழங்கப்படாததைக் கண்டித்தே, மக்கள் சாலை மறியல் போராட்டம் நடத்தியதாகவும் எனவே இவர்கள் மீது தொடுக்கப்பட்ட வழக்குகளை ரத்து செய்ய வேண்டும் என்று வாதிட்டார்.

இந்த வாதங்களை ஏற்றுக் கொண்ட நீதிபதி சாலை மறியல் போராட்டம் நடத்தியதற்காக, தொடரப்பட்ட வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டுள்ளார். ஆனால் போராட்டத்தின்போது காவல் துறை வாகனத்தை உடைத்ததாக 60 பேர் மீது தொடரப்பட்ட வழக்கை ரத்து செய்ய மறுத்த நீதிபதி அந்த மனுக்களைத் தள்ளுபடி செய்துள்ளார்.

Last Updated : Jul 23, 2019, 3:07 PM IST

ABOUT THE AUTHOR

...view details