சென்னை: ராயபுரம் 51ஆவது வார்டு திமுக கவுன்சிலர் நிரஞ்சனாவின் கணவர் ஜெகதீசன் மார்ச் 30ஆம் தேதி நள்ளிரவு ராயபுரத்தில், தனது ஆதரவாளர்களுடன் மது அருந்தியதுடன், வாகனங்களை சாலையின் குறுக்கே நிறுத்தியதாக கூறப்படுகிறது.
அப்போது, ரோந்து பணியில் இருந்த வண்ணாரப்பேட்டை காவல் நிலைய காவலர்கள் தியாகராஜன், மணிவண்ணன் ஆகியோர் இவர்களை கண்டித்துள்ளனர். இதனால் கோபமடைந்த ஜெகதீசன் "எங்களை கேட்பதற்கு நீங்கள் யார்?. நான் நினைத்தால் உன்னை காலி செய்து விடுவேன்" என்று மிரட்டியுள்ளார்.
இதுதொடர்பாக காவலர் தியாகராஜன், வண்ணாரப்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதனடிப்படையில் ஜெகதீசன், சதீஸ், வினோத் உள்ளிட்ட 5 பேர் மீதும் கும்பலாக கூடுதல், அவதூறாகப் பேசுதல், அரசு ஊழியரைப் பணி செய்ய விடாமல் தடுத்தல், மிரட்டுதல் ஆகிய 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.