தமிழ்நாடு

tamil nadu

By

Published : Jun 6, 2022, 1:35 PM IST

ETV Bharat / city

சென்னை மலர் கண்காட்சி நிறைவு!

சென்னையில் மலர் கண்காட்சி நேற்றுடன் (ஜுன்.05) நிறைவு பெற்றது. இதுகுறித்த சிறப்பு செய்தித் தொகுப்பை இந்த பதிவில் காணலாம்.

சென்னையில் மலர் கண்காட்சி  நேற்றுடன் நிறைவு பெற்றது
சென்னையில் மலர் கண்காட்சி நேற்றுடன் நிறைவு பெற்றது

சென்னை கலைவாணர் அரங்கத்தில் கடந்த 3 ஆம் தேதி முதல் மூன்று நாட்கள் மலர் கண்காட்சி நடைபெற்றது. தமிழ்நாடு அரசு சார்பில் ஊட்டி மலர் கண்காட்சி, கொடைக்கானலில் மலர் கண்காட்சி, ஏலகிரியில் மலர் கண்காட்சி ஆகிய இடங்களில் மட்டுமே மலர் கண்காட்சி வைத்த நிலையில் சென்னையில் மலர் கண்காட்சி நடைபெறுவது இதுவே முதல்முறை ஆகும்.

மலர்க் கண்காட்சியில் ஒரு பகுதியாக காய்கறி மற்றும் பழங்களை உருவாக்கப்பட்டுள்ள பகுதியை பார்வையாளர்களை கவரும் வண்ணம் அமைக்கப்பட்டிருந்தது. மேலும் இதைத்தவிர செல்ஃபி எடுக்கும் பகுதி மலர் வளைவுகள் மணல்தொட்டி அடுக்குகளால் ஆன வடிவமைப்புகள் அமைக்க சுமார் 4 லட்சம் மலர்கள் பயன்படுத்தப்பட்டுள்ளது.

மலர் கண்காட்சி

மலர்களால் ஆன பஸ், இருக்கைகள் தேர் மற்றும் நறுமணப் பொருட்களில் கிராம்பு ஏலக்காயால் செய்யப்பட்ட மாடு மற்றும் விவசாயிகளின் உருவம், இலக்கியம் தொடர்பான தகவல்கள் உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் கண் கவரும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. அதிக அளவில் பெருந்திரளான மக்கள் கண்காட்சியை கண்டு ரசித்தனர்.

இதுகுறித்து நம்மிடம் பேசிய தோட்டக்கலை கூடுதல் இயக்குநர் சா. தமிழ்வேந்தன், “இந்த தலைமுறைக்கு நடத்தப்படும் முதல் மலர் கண்காட்சி, இந்த மலர் கண்காட்சிக்கு பொதுமக்கள் அதிக வரவேற்பை அளித்துள்ளனர். இந்த மலர் கண்காட்சியில் 27 வகையான மலர்கள் பயன்படுத்தப்பட்டுள்ளது. இக்கண்காட்சியில் கடையேழு வள்ளல்கள் என்ன செய்தார்கள் என்பது குறித்த வடிவமைப்பு இடம்பெற்றுள்ளது.

சாமந்தி பூவில் ஐஸ்கிரீம் வடிவில் அமைக்கப்பட்டுள்ளது. பெரிய வடிவிலான மயில், முற்றிலும் பழங்களால் உருவாக்கப்பட்ட வடிவங்கள், இவை எல்லாம் குழந்தைகள் முதல் வயதானவர்கள் அனைவரையும் ஈர்த்து வருகிறது. முல்லைக்கு தேர் கொடுத்த பாரி, அதியமானுக்கு ஔவையார் நெல்லிக்கனி கொடுத்த வடிவம், யாழ் போன்றவை அமைக்கப்பட்டுள்ளது” எனத் தெரிவித்தார்.

இதைத்தொடர்ந்து நம்மிடம் பேசிய பார்வையாளர் அன்சாரி, “இந்த மலர் கண்காட்சியை பார்க்கும்போது ரொம்ப சிறப்பாக இருக்கு. இதனை முன்பே செய்திருந்தால் இன்னும் நன்றாக இருக்கும். ஊட்டியில் இதுவரைப் பார்த்த நிலையில் சென்னையில் மலர் கண்காட்சியில் பார்ப்பது மிக சிறப்பாக உள்ளது. மலர் கண்காட்சியை காண இன்னும் அதிக நாட்கள் இருந்தால் நன்றாக இருக்கும்” எனத் தெரிவித்தார்.

இதுகுறித்து நம்மிடம் பேசிய பார்வையாளர் செல்வகணபதி, “மலர் கண்காட்சியை அனைத்து இடங்களையும் சுற்றிப் பார்த்தோம் மிக அருமையாக இருந்தது. குறிப்பாக செல்ஃபி எடுக்க வைக்கப்பட்ட பேருந்து, மீன், காய்கறிகளில் தலைவர்கள் உருவங்கள், பட்டாம்பூச்சி காய்கறிகளிலும் பழங்களிலும் செய்தது மிகவும் சிறப்பாக இருந்தது. மிக சிறப்பாக இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது, ஊட்டியில் இருப்பது போன்று தற்போது இங்கு உள்ளது. கரோனா முடிந்து, மக்களோடு மக்களாக குழுமியிருந்து இந்த கண்காட்சியை பார்க்கும்போது திருவிழா போன்று இருக்கிறது” எனத் தெரிவித்தார்.

கட்டணம் தவிர்த்திருக்கலாம்

இங்கு வந்த ஒரு சில பொதுமக்கள், அரசு சார்பில் நடத்தப்படும் இந்த மலர் கண்காட்சியில் கட்டணத்தை தவிர்த்து இருக்கலாம் எனத் தெரிவித்தனர். மேலும் மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் 99-ஆவது பிறந்தநாளை முன்னிட்டு இந்த மலர் கண்காட்சி நடைபெறுவதால் யாருக்காக இந்த கட்டணம் வசூலிக்கப்படுகிறது என்று கேள்வி எழுப்பினர்.

இதையும் படிங்க:Special: தமிழ்நாட்டின் முதல் சொகுசு கப்பல் சுற்றுலா குறித்த செய்தி தொகுப்பு

ABOUT THE AUTHOR

...view details