சென்னை: சட்டமேதை அண்ணல் அம்பேத்கரின் 132ஆவது பிறந்தநாளை முன்னிட்டு, இன்று (ஏப்.14) அனைத்து அரசியல் கட்சித்தலைவர்களும் ஆங்காங்கே அம்பேத்கர் சிலைக்கு மாலையிட்டு மரியாதை செலுத்தி வருகின்றனர்.
அந்த வகையில் சென்னை கோயம்பேட்டில் அமைந்துள்ள அம்பேத்கர் சிலைக்கு மாலையிட்டு மரியாதை செலுத்த விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் இன்று காலை வந்தார். அப்போது விசிக தொண்டர்கள் சிலைக்கு அருகே இருந்த கம்பத்தில் விசிகவின் கொடியைக் கட்டி ஜெய்பீம் கோஷங்களை எழுப்பினர்.
இதனையடுத்து திருமாவளவன் மாலையிட்டு சென்ற பின்பு, மத்திய இணையமைச்சர் எல்.முருகன் மற்றும் தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை ஆகியோர் மாலையிட வருவதாக அறிந்து, அங்கிருந்த பாஜக தொண்டர்கள் கம்பத்தில் இருந்த விசிக கொடியை நீக்கிவிட்டு பாஜக கொடியைக் கட்டியதாகக் கூறப்படுகிறது.