சென்னை: தமிழ்நாட்டில் பருவமழை காரணமாக அனைத்து மாவட்டங்களிலும் சம்பா பயிர் நடவுப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இந்தாண்டு 13.168 லட்சம் ஏக்கர் பரப்பளவில் சம்பா நெல் நடவுப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
நடவுப்பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருவதால் உரங்களின் தேவை அதிகரித்துள்ளது. இதன் காரணமாக விலை உயர்வு, தட்டுப்பாடு உள்ளிட்ட உரங்கள் விற்பனைத் தொடர்பாக ஏற்படும் இடர்பாடுகளை களைவதற்காக ஒவ்வொரு மாவட்டத்திலும் வேளாண்மை இணை இயக்குநர் அலுவலகத்தில் உரக்கண்காணிப்பு மையம் செயல்படுகிறது.
தனியார் உரக்கடைகள் ஆய்வு
உரக் கண்காணிப்பு மையத்திற்கு வரும் உரம் தொடர்பான புகார்கள் மீது உடனுக்குடன் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதன் காரணமாக நேற்று (அக். 8) தமிழ்நாடு முழுவதும் 3,391 தனியார் உரக் கடைகளில் உரம் இருப்பு, விலை, இருப்பு பட்டியல் முதலான பணிகள் குறித்து வேளாண்மை துறையினரால் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
விற்பனை, உண்மை இருப்பு ஆகியவற்றில் வித்தியாசம் காணப்பட்ட 84 உரக்கடை உரிமையாளர்களிடம் விளக்கம் கேட்கப்பட்டுள்ளது. உரம் இருப்பு, விற்பனை விலை குறித்த தகவல் பலகை பராமரிக்காத ஆறு உரக்கடைகள் மீது எச்சரிக்கை செய்யப்பட்டுள்ளது.